• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன?

ByKalamegam Viswanathan

Aug 13, 2026

மக்கள் நம்மிடம் எதை எதிர்பார்க்கின்றார்கள் என்பதை பொது வாழ்க்கையில் இருக்கிற நாம் முதலிலே தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். அதுதான் வெற்றியின் ரகசியம். இதில் முதல்வர் பலே கில்லாடி ,கைத்தேர்ந்தவர் என்பதால்தான் கட்சி ஆரம்பித்து 2 ஆண்டுகளிலே 35% வாக்குகளை வசீகரத்தால் வளைத்துப் போட்டு புதிய ஆட்சி அமைத்துதற்போது தமிழ்நாட்டின் முதல்வராக வலம் வருகிறார் .

த.வெ.க ஆட்சி அமைத்து வருகிற ஆகஸ்ட் 17ஆம் தேதியோடு 100 நாட்கள் நிறைவு பெறுகிறது.இந்த 100 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்தது என்ன சாதனையா? இல்லை வேதனையா? என்பதுதான் இப்போதைய தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வியாக இருக்கிறது.
சட்டசபையிலே சப்ஜெக்ட் பேசுங்க சிஎம் சார் என்றால், அவரே ஒரு சப்ஜெக்ட்டாக அரியணையில் அமைதியாக அமர்ந்திருப்பது நாட்டு மக்களுக்கு கவலையை தந்திருக்கிறது.

தவெக கட்சியின் புதிய ஆட்சிக்கு காரணம் தவெக தேர்தல் அறிக்கையும் ஒன்று,இப்போது நிதி அமைச்சர் சட்டசபையிலே தாக்கல் செய்துள்ள
34 பக்க பட்ஜெட் சிறப்பு அம்சங்களை ஒப்பிட்டுப் பார்த்தால், தவெக தேர்தல் அறிக்கை என்பது அப்பட்டமாக ஓட்டுகளை அறுவடை செய்ய எழுதப்பட்ட ஒரு மாபெரும் கற்பனைக் காவியம். தவெக பட்ஜெட் என்பது தமிழ்நாட்டில் கஜானா காலியாக உள்ளதைச் சொல்லும் ஒரு மாபெரும் சரித்திர காவியமாகத்தான் இப்போது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு முடித்திருக்கிறது.

தேர்தல் அறிக்கையில் சொன்ன பெண்களுக்கு மாதம் 2500 ரூபாய் உரிமைத்தொகையை இந்த பட்ஜெட்டில் ஏன் அறிவிக்கவில்லை? கஜானா காலியாக இருக்கும்போது ஆண்டுக்கு 30,000 கோடிக்கு அதிகமாக செலவாகும் இந்த திட்டத்தை செயல்படுத்த கொஞ்சம் ஆழ்ந்த பொருளாதார அனுபவம் தேவை என்பது அரசியல் அரிச்சுவடி அறிந்த அனுபவம் உள்ள கட்சியினர்களுக்கு தெரியும்.

ஆனால் அரசியல் கத்துக்குட்டிகளான தவெக கட்சி துணிச்சலோடு இந்த 2500 ரூபாய் திட்டத்தை அறிவித்து, இப்போது செயல்படுத்த துணிச்சல் இல்லாமல் இந்த பட்ஜெட்டில் துவண்டு போய்விட்டது தவெக அரசு என்பது நிதர்சனமான உண்மை.

இன்றைக்கு தமிழ்நாட்டு மக்களின் கேள்வி என்ன தெரியுமா? தேர்தல் அறிக்கையை தயாரித்த தவெக கட்சிக்காரர்களுக்கு இது சாத்தியமில்லை என்று தேர்தலுக்கு முன்பே தெரியுமா, தெரியாதா? நன்றாகவே தெரியும். தெரிந்தும் ஏன் தவெக வாக்குறுதி அளித்தது?
இது விஜய்யின் வாக்குறுதி மோசடியாகும்.

மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய தவெக கட்சி காட்டிய கண்கட்டி வித்தை, இப்போது ஆட்சிக்கு வந்ததும் தாங்கள் சொன்ன மாபெரும் மோசடியை மறைக்க தவெக அரசு எடுத்திருக்கும் தந்திரம்தான் தாய்மாமன் சீர்திட்டம், அண்ணன் சீர்திட்டம் என்று அதிரடி அறிவிப்புகள்.

மாதம் 2500 ரூபாய் என்ற வாக்குறுதியை காற்றிலே பறக்கவிட்டுவிட்டு, ரூபாய் 560 கோடியில் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம், 812 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் திருமணமாகும் பெண்களுக்கான 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை வழங்கப்படும் என்ற தவெக அரசின் அறிவிப்பு, தாய்மார்களின் ஆத்திரத்தை மடைமாற்றம் செய்கிற இன்னொரு தந்திர நாடகம்.

அதேபோல மாதம்தோறும் மின்கட்டணம் கணக்கிடப்படும் என்று தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல், 1,545 கோடியை ஒதுக்கீடு செய்து, 200 யூனிட் இலவச மின்சாரம் என்ற பெயரிலே நடுத்தர வர்க்கத்தின் கண்களை கட்டிவிட்டு, இப்போது மின்சார கட்டணத்தை அறிவிப்பு இல்லாமல் அதிகரித்துள்ளது தவெக அரசின அடுத்த அதிரடி.

இளைஞர்களுக்கு அளிக்கப்பட்ட கல்வி கடன் தள்ளுபடி வாக்குறுதியை அமைதியாக அடக்கம் செய்துவிட்டு, 2000 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் அம்மா தந்திட்ட மடிக்கணின் திட்டத்தை வெற்றி மடிக்கணினி திட்டம் என அறிவித்து, இளைய சமுதாயத்தை சாந்தப்படுத்த அறிவிப்பு செய்திருக்கிறது தவெக அரசு.

அரசு ஊழியர்கள் வாக்குகளை கவர வசீகரமான வீசப்பட்ட பழைய ஓய்வூதிய திட்டம் வாக்குறுதியை, பட்ஜெட்டில் காணாமல் போய்விட்டது. மாற்றத்தை எதிர்பார்த்த அரசு ஊழியர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை தந்திருப்பது தவெக அரசு தடுமாற்றத்திற்கு அடுத்த அடுத்த அடிகள் இன்றைக்கு தவெக அரசு மீது விழுந்து கொண்டே இருக்கிறது.

ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது மூலதன செலவினங்களில் முதலீடு செய்வதில்தான் இருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். அதாவது சாலைகள், பாலங்கள், தொழிற்சாலைகள், அடிப்படை கட்டமைப்புகள் ஆகியவற்றை உருவாக்குவது, ஆனால் இந்த பட்ஜெட்டில் வருவாய் செலவினங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

அதோடு மாநிலத்தின் வருவாய் பற்றாக்குறை,நிதி பற்றாக்குறை, மூலதன செலவினங்கள் ஆகிய குறியீடுகளில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட மிகவும் பின்தங்கியுள்ளது என்பதை தவெக அரசு வெளிப்படையாக ஒப்புக்கொண்டதோடு, புதிய திட்டங்களுக்கான நிதி ஆதாரமும் குறைவு, வரவுக்கும் செலவுக்கும் சற்றும் தொடர்பில்லாத அறிவிப்புகளை அதிரடியாக அள்ளி வீசி வருகிறது தவெக அரசு.
இந்த திட்ட செலவுகளுக்காக அரசு எப்படி நிதி திரட்டப் போகிறது?

15,000 கோடி கூடுதல் வருவாய் ஈட்டப் போவதாக கணக்கு காட்டப்பட்டிருக்கிறது.தொழில் வளர்ச்சி மூலம் வருவாயை பெருக்காமல், மறைமுக வரிகளையும், மதுபான உற்பத்தியாளர்களை நம்பிதான் கஜானாவை நிரப்ப நினைக்கிறது விஜய்யின் பொருளாதார மாடல்.

மதுபான உற்பத்தியாளர்களை நம்பி கஜானாவை நிரப்ப நினைப்பது என்ன? விஜய்யின் பொருளாதார மாடலா? அல்லது வெற்றி பொருளாதார மாடலா? அல்லது வெற்று பொருளாதார மாடலா? என்பதுதான் இப்போதைய புரியாத புதிராக இருக்கிறது.

கல்வி நிறுவனங்கள், வழிபாட்டு தளங்கள் அருகில் 717 சில்லறை மதுபான கடைகளை மூடிவிட்டதாக அறிவித்த மதுவிலக்கு நாடகம், இன்றைக்கு அப்பட்டமாக வெட்ட வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. ஏனென்றால் அறிவிப்பு வெளியிட்ட அதே மூச்சில் மதுபான உற்பத்தியாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிப்பதின் மூலம் ஆண்டுக்கு சுமார் 1000 கோடி கூடுதல் வருவாய் எதிர்பார்க்கப்படுவதாக சொல்லப்பட்டிருக்கிறது. டாஸ்மார்க் வருமானத்தை நம்பித்தான் திராவிட கட்சிகள் ஆண்டன என்று வீர வசனமாக முழங்கிய விஜய் , இப்போது அதே மதுபான ஆலை உற்பத்தியாளரிடமிருந்து கூடுதல் கட்டணம் வசூலித்து கஜானாவை நிரப்ப நினைப்பது எந்த வகையான அறத்தின் ஆட்சியாகும்?

பிறப்புக்கும் எல்லா உயிருக்கும் என வள்ளுவரின் குரலோடு ஆரம்பித்த சமத்துவ கோட்பாடு, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என ஆரம்ப பக்கங்களில் பிரமாதமான வார்த்தைகளை பயன்படுத்திவிட்டு, உள்ளே சென்றால் முந்தைய ஆட்சியின் அதே பழைய படத்தை வெற்றி என்று ரீமேக் செய்து, வெற்றி அடையாள மொழிவோடு மீண்டும் வெளியிட்டிருக்கிறது

இந்த தவெக அரசு. ஒரு மாற்று அரசியலை முன்னெடுப்பதாக வீர வசனம் பேசி வந்தவர்கள், அதே பொருளாதார கட்டமைப்புக்குள் தங்களை சுருக்கிக் கொண்டது தவெக அரசின் வரலாற்று பிழையாகத்தான் இப்போது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது.

ஆட்சிகள் மாறும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்பவுடன் காத்திருப்பார், தங்களை மீட்க ஒரு புதிய வெளிச்சத்தை தேடிய மக்களுக்கு இந்த பட்ஜெட் இருளை தான் பரிசாக தந்திருக்கிறது.

வெற்றி பட்ஜெட் என்று முழங்கிய தவெக, இன்றைக்கு வெற்று பட்ஜெட்டை தந்திருப்பது வெட்ட வெளிச்சமாய் இருக்கிறது. இன்றைக்கு முதல்வர் தலைமையில் வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு முழக்கமும், இன்றைக்கு இதில் தொழில் முதலீட்டாளர்களுக்கு முறையான அழைப்பே இல்லாமல் தொழில் துறையின் இந்த மாநாடு, எந்த நிலையிலே இருக்கிறது என்பதற்கு சான்றுதான்.

விஜய் பொறுப்பேற்றதற்கு பிறகு நான்கு மாநிலங்களில்
முதலமைச்சர்கள் பொறுப்பேற்றார்கள். 6 வது இடத்தில் இருந்த தமிழ்நாட்டின் தொழில் துறை, விஜய் பொறுப்பேற்றதற்கு பிறகு 17வது இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது. அந்த சாதனையும் வேதனையும் என்னவென்று சொல்வது?

ஆக, வெற்றி வெற்றி என்று பெயரில் அறிவித்துவிட்டு, நடைமுறையிலே வெற்று வெற்று என்று சறுக்கிக் கொண்டிருக்கிற தவெக அரசின் தடுமாற்றம் தமிழகத்தை எங்கே போய் நிறுத்துமோ? கவலையோடு கண்ணீரோடு காத்திருக்கிறது. தமிழகம் என கூறினார்.