கோவை மாநகரின் பழமையான மற்றும் பிரசித்தி பெற்ற அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில் உண்டியல் திருட்டு தொடர்பாக எழுந்த முறைகேடு புகார் விவகாரத்தில், பூசாரி உள்பட நான்கு பேரை உக்கடம் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோனியம்மன் கோவிலில் உண்டியல் பணம் மற்றும் நிர்வாக நடவடிக்கைகளில் முறைகேடு நடந்ததாக கோவில் செயல் அலுவலர் (EO) குமார் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

விசாரணையில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், கோவிலில் பணியாற்றி வந்த டிக்கெட் விற்பனையாளர் பாலசுப்பிரமணியம்,
அலுவலக உதவியாளர் சரவணன்,திருவலகு பணியாளர் பிரதீப் குமார்,பூசாரி கிருஷ்ணராஜ் ஆகிய நான்கு பேரையும் உக்கடம் போலீசார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த முறைகேட்டில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா, கோவில் நிதி பரிவர்த்தனைகளில் கூடுதல் முறைகேடுகள் நடந்துள்ளனவா என்பது குறித்தும் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இதனிடையே, கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், நீதிபதியின் இல்லத்தில் ஆஜர்படுத்த போலீசார் அழைத்துச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கோவை கோனியம்மன் கோவிலில் நடைபெற்றதாகக் கூறப்படும் இந்த உண்டியல் திருட்டு விவகாரம், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




