கோவை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் ரங்கநாயகி தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே கடந்த திமுக ஆட்சியில் செம்மொழி பூங்கா அமைப்பில் ரூ.40 கோடி அளவிலான முறைகேடு நடைபெற்றதாக காங்கிரஸ் கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த விவகாரத்தை முன்வைத்து காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் திமுக கவுன்சிலர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரிக்கும் திமுக பெண் கவுன்சிலர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் மாமன்றத்தில் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து காங்கிரஸ் கவுன்சிலர் காயத்ரி மேடையில் ஏறி நின்று மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் கூட்டத்தில் அமளி ஏற்பட்டது.
தொடர்ந்து அவை ஒழுங்கை பாதித்ததாகக் கூறி கவுன்சிலர்கள் ராமமூர்த்தி, பூபதி, சாந்தி, பிரபா ரவீந்திரன் மற்றும் காயத்ரி ஆகிய ஐந்து பேரையும் இரண்டு மாதங்களுக்கு இடைநீக்கம் (சஸ்பெண்ட்) செய்வதாக மேயர் ரங்கநாயகி அறிவித்தார்.
இந்த சம்பவத்தால் கோவை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.




