சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, சென்னை பெருங்குடி அருகே உள்ள டெக்கலத்தான் விளையாட்டு மைதானத்தில், அனஹத யோகா அகாடமி சார்பில் யுனிவர்சல் புக் ஆப் அச்சீவ்மெண்ட்ஸ் கவுன்சிலின் அங்கீகாரத்துடன் உலக சாதனை நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.

யோகா ஆசிரியர்கள் திலீபன், ஆர்த்தி மற்றும் பவானி ஆகியோர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில், 4 வயது குழந்தைகள் முதல் 70 வயது வரை உள்ளோர் மற்றும் யோகா ஆசிரியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் உற்சாகமாக பங்கேற்றனர்.
உலக சாதனை முயற்சியின் ஒரு பகுதியாக, பங்கேற்பாளர்கள் அனைவரும் பல்வேறு யோகாசனங்களை தொடர்ந்து 12 நிமிடங்கள் இடைவிடாமல் செய்து புதிய உலக சாதனையை படைத்தனர். மேலும், 10 நிமிடங்கள் தொடர்ச்சியாக பார்ட்னர் யோகா செய்து பார்வையாளர்களின் பாராட்டைப் பெற்றனர்.

நிகழ்ச்சியில் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் உதவி மருத்துவ அலுவலர் மற்றும் யோகா விரிவுரையாளர் டாக்டர் எம். திருசிற்றம்பலம், யோகா கலைமாமணி கணேஷ் குமார் மற்றும் யோகா கலைமாமணி பி. ராஜகோபால் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, யோகாவின் உடல் மற்றும் மனநல நன்மைகள் குறித்து விழிப்புணர்வு உரையாற்றினர்.

மேலும், ஆனந்தாசனம், யோகநித்ராசனம், அர்த்த மச்சேந்திராசனம், கோமுகாசனம் உள்ளிட்ட பல்வேறு யோகாசனங்களுடன், கண்களைக் கட்டிக்கொண்டு யோகாசனங்களை செய்து பங்கேற்பாளர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர்.
இந்த உலக சாதனை முயற்சியை யுனிவர்சல் புக் ஆப் அச்சீவ்மெண்ட்ஸ் கவுன்சிலின் இயக்குநர் பிரபாகரன் மற்றும் நடுவர்கள் சுகந்தன், சுகந்தி ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தனர். தொடர்ந்து உலக சாதனையில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன.




