மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமத்தில் காளியம்மன் கோவில் முன்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செல்லும் வழியில் மின்கம்பத்தில் சென்ற மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. இதன் காரணமாக சுமார் ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளில் திடீரென மின்சாரம் தடைப்பட்டது. வீட்டிற்கு வெளியில் வந்து பார்த்ததில் தெருவில் மின்சார வயர் அறுந்து விழுந்து கிடந்தது.

உடனடியாக அந்தப் பகுதி பொதுமக்கள் ஊராட்சி செயலாளர் விக்னேஷ் மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மின்சாரத்துறை பணியாளர்கள் மின்சாரத்தை நிறுத்தி கீழே அறுந்து கிடந்த வயரை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்து வந்து மின்சார வயரை சரி செய்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக பொதுமக்கள் கூறினர். இந்த நிலையில் மின்சார வயர் அறுந்து விழுந்ததும் சம்பந்தப்பட்ட இடத்தில் இருந்த பொதுமக்கள் வயர் அறுந்து விழுந்து கிடந்த இடத்தின் இருபுறமும் ஆட்களை நிறுத்தி மின் வயர் கிடந்த பகுதிக்கு யாரும் செல்லாதவாறு இரு பக்கமும் இருந்து எச்சரிக்கை செய்தனர்.

பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் இடத்தில் மின்சார வயர் அறுந்து கீழே விழுந்து கிடந்த நேரத்தில் பொதுமக்கள் யாரும் செல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டதாக கூறுகின்றனர். மின்கம்பங்களில் செல்லும் வயர்கள் மிக பழைய வயர்களாக இருப்பதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

ஆகையால் மின்தடை செய்யும் காலங்களில் இது போன்ற பழைய வயர்களை மாற்றி அந்த இடங்களில் புதுவயர்களை மின்கம்பங்கள் வழியாக கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென மின்சார துறை அதிகாரிகளுக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.




