கோவையில் ஆன்லைன் ஆப் மூலம் புக் செய்யப்பட்ட தொகையை விட இரண்டு மடங்கு கூடுதல் கட்டணம் கேட்டு, குடும்பத்தினரைத் தாக்கிய ஓலா (OLA) ஆட்டோ ஓட்டுநரை நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் துணிச்சலாகத் தட்டிக்கேட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புக் செய்த ஒரு ஆட்டோ… வந்த மற்றொரு ஆட்டோ:
கோவை வெரைட்டி ஹால் ரோடு பகுதியில் இருந்து பூசாரிபாளையம் பகுதிக்குச் செல்வதற்காகக் கைக்குழந்தையுடன் வந்த ஒரு குடும்பத்தினர், தங்களது மொபைல் போனில் ஓலா ஆப் மூலம் ஆட்டோ ஒன்றை புக் செய்து உள்ளனர்.
அப்போது, முதலில் இவர்களது சவாரியை ஏற்றுக் கொண்ட ஆட்டோ ஓட்டுநர் திடீரென அதனை ரத்து செய்து உள்ளார். ஆனால், அதற்குப் பதிலாக அதே இடத்திற்கு மற்றொரு ஓலா ஆட்டோ ஓட்டுநர் வந்து, “நான் தான் உங்களை அழைத்துச் செல்ல வந்தேன், ஏறுங்கள்” எனக் கூறி அக்குடும்பத்தினரை ஏற்றி உள்ளார்.
ஆட்டோ சிறிது தூரம் சென்றதும், ஓலாவில் காட்டிய அசல் கட்டணத் தொகையான 150 ரூபாய்க்குப் பதிலாக, தனக்கு இரட்டிப்பாக 300 ரூபாய் தர வேண்டும் என ஓட்டுநர் கறாராகக் கேட்டு உள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், “ஏன் இவ்வளவு கூடுதல் கட்டணம் கேட்கிறீர்கள்?” என நியாயமாகக் கேள்வி எழுப்பி உள்ளனர்.
அதற்கு அந்தப் பெண்ணின் கணவர், “நாங்க என்ன இங்கு இருந்து துபாய்க்கா போறோம்… பக்கத்துல இருக்குற பூசாரிபாளையத்துக்குத் தானே போறோம் ? இதுக்கு எதுக்கு டபுள் மடங்கு காசு கேக்குறீங்க ?” என்று எதார்த்தமாகக் கேட்டு உள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர், அந்த நபரை நடுரோட்டிலேயே தகாத வார்த்தைகளால் திட்டி, திடீரெனக் கைகளால் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
தனது கணவனை ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதைக் கண்டு கொதித்தெழுந்த அந்தப் பெண், கையில் தனது பச்சிளம் குழந்தையை வைத்து இருந்ததையும் பொருட்படுத்தாமல், உடனடியாக நடுரோட்டில் இறங்கி ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்து விஸ்வரூப வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
“கையில குழந்தையை வெச்சிருக்கோம்னு கூட பார்க்காம எப்படி என் புருஷனை அடிக்கலாம்? ஆப்ல காட்டுற காசை விட ஏண்டா எக்ஸ்ட்ரா கேக்குறீங்க ?” என அந்தப் பெண் ஆக்ரோஷமாகக் கேள்வி எழுப்ப, அங்கு இருந்த பொதுமக்கள் ஓடிவந்து இரு தரப்பையும் தடுத்து நிறுத்தினர்.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர், அங்கு இருந்து அவசர அவசரமாகத் தனது ஆட்டோவை எடுத்துக் கொண்டு எஸ்கேப் ஆனார்.
நடுரோட்டில் கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆட்டோ ஓட்டுநரின் அராஜகத்தை எதிர்த்துப் போராடிய இந்தக் காட்சிகளை, அங்கு இருந்த பொதுமக்களில் ஒருவர் தனது செல்போனில் வீடியோவாகப் பதிவு செய்து இணையத்தில் பகிர்ந்து உள்ளார்.

தற்பொழுது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது.
“கோவையில் சமீபகாலமாக ஓலா, ரேபிடோ, ஊபர் போன்ற ஆன்லைன் ஆட்டோ ஓட்டுநர்கள் கூடுதல் கட்டணம் கேட்டுப் பொதுமக்களை மிரட்டுவதும், தாக்குவதும் தொடர் கதையாகி வருகிறது.
போக்குவரத்து போலீஸாரும், ஆர்.டி.ஓ அதிகாரிகளும் இதற்கு ஒரு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என கோவை மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.




