செங்கல்பட்டு மாவட்டம், தாம்பரம் அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே, இஸ்லாமிய மதம் தழுவிய பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை மறுக்கும் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பை கண்டித்து, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எம். யாகூப் தலைமை தாங்கினார். இதில் செங்கல்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள், உறுப்பினர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள், “முந்தைய திமுக ஆட்சியில் நீண்டகாலப் போராட்டத்திற்குப் பிறகு இஸ்லாமியர்களுக்கு கிடைத்த இடஒதுக்கீட்டு உரிமையை பாதிக்கும் வகையில் இந்தத் தீர்ப்பு அமைந்துள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல் முறையீடு செய்து, இஸ்லாமியர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும்” என்று வலியுறுத்தினர்.

மேலும், இடஒதுக்கீட்டு உரிமையை பாதுகாக்க வேண்டும், சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும், நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டம் முழுவதும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பின்னர், அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.



