கட்டா குஸ்தி – 2 ம் பாகம் திரைப்படத்தின் புரமோஷன் காட்சிகள் கோவை விமான நிலையம் அருகே உள்ள ப்ராடுவே திரையரங்கில் நடைபெற்றது. இதில் சிறப்பம்சமாக இத்திரைப்படத்தில் நடத்த நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ரசிகர்கள் மத்தியில் தோன்றி ரசிகர்களின் எதிர்பார்ப்பு குறித்து கேட்டறிந்தனர். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷ்ணு விஷால், கூறியதாவது..

சமூக வலைதளத்தில் தன்னைப் பற்றிய கருத்துகள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறிய கருத்தை எடுத்துக்காட்டாக மட்டுமே குறிப்பிட்டதாக தெரிவித்தார்.
மேலும் நான் யாரையும் குறிப்பிட்டு கருத்து கூறவில்லை எனவும், யாருக்கு எதிராகவோ, யாருக்கு ஆதரவாகவோ பேசவில்லை என்றார். அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டாருக்கே விளக்கம் அளிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. அந்த அளவுக்கு சமூக வலைதளங்கள் ஒரு சூழலை உருவாக்கியிருப்பது வருத்தமாக உள்ளது,” என்றார்.
மேலும், “யார் முதலில் குற்றச்சாட்டை முன்வைக்கிறார்களோ, அதுவே உண்மை என பலர் நம்பி விடுகிறார்கள். அதனால் விளக்கம் அளிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. யாருக்கும் எதிராக பேசும் எண்ணம் எனக்கு இல்லை,” என்று கூறினார்.
சமூக வலைதளங்களைப் பற்றி பேசிய அவர், “கருத்து பதிவிட அனைவருக்கும் உரிமை உள்ளது. ஆனால் நடிகர்கள் பேசும்போது மட்டும் அது ஏன் பெரிய விமர்சனமாக மாறுகிறது? எங்களுக்கும் கருத்து தெரிவிக்கும் சுதந்திரம் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் அன்பு இருப்பது போலவே வெறுப்பும் உள்ளது. பிடிக்கவில்லை என்றால் கருத்து சொல்லலாம். ஆனால் தனிப்பட்ட தாக்குதலும், தரக்குறைவான வார்த்தைகளும் வேதனை அளிக்கின்றன. அனைவரும் ஒருநாள் இறக்கப் போகிறோம்; மனிதநேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும்,” என்றார்.



