புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சின்னத்துரை என்பவர் குட்டைக் குளத்தை காணவில்லை என்றும் அதை கண்டுபிடித்து தர வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தார்.

இது குறித்து அவர் கூறுகையில் எங்கள் ஊரான ஆதணக்கோட்டையில் குட்டைக் குளம் என்று ஒரு குளம் இருந்தது. அந்தக் குளத்தை எங்கள் ஊரில் உள்ள பிராமணர் சமூகத்தை சேர்ந்தவர்கள் குளிப்பதற்கு பயன்படுத்தி வந்தார்கள். அதை புதிய அக்ரஹார குளம் என்றும் கூறுவார்கள். இப்போது அந்தக் குளத்தை காணவில்லை. தற்போது வரைபடத்தையும் மாற்றி இருக்கிறார்கள். இது குறித்து அதிகாரிகளிடம் மனு கொடுத்தால் அந்த மன நேரடியாக ஊராட்சி மன்ற தலைவருக்கு சென்று விட்டது. அதன் பிறகு அவரும் அதிகாரிகளும் கூட்டு சேர்ந்து நிலத்தை யாருக்கும் விற்கிறார்களா என்பது தெரியவில்லை.
அருகில் வீடு வைத்திருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அதை ஆக்கிரமித்துக் கொண்டு செல்கிறார்கள். அதில் கழிவறைகள் கட்டப்பட்டுள்ளன. ஒருவர் ஆழ்குழாய் கிணறு அமைத்து வீடு கட்டி இருக்கிறார். இது குறித்து கடந்த 10 ஆண்டுகளாக அதிகாரிகளிடம் மனு கொடுத்து இருக்கிறேன். ஆனால் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இன்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்து இருக்கிறேன். நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருக்கிறார். இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஊர்மக்கள் திரண்டு வந்து மனு கொடுப்பது போராடுவது என்பதை தவிர வேறு வழியில்லை என்றார்.




