கோவை மாநகரப் பகுதியில் இன்று காலை முதல் பல்வேறு இடங்களில் திடீரெனப் பெய்யத் தொடங்கிய இதமான சாரல் மழையினால், பள்ளிக்குச் செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பணிக்குச் செல்லும் பொதுமக்கள் நனைந்தபடி குடைகளைப் பிடித்துச் சென்றனர்.

கடந்த சில நாட்களாகக் கோவையில் கோடை வெயிலின் தாக்கம் நீடித்து வந்த நிலையில், இன்று காலை வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மாநகரின் முக்கியப் பகுதிகளான காந்திபுரம், ரயில் நிலையம், உக்கடம், பீளமேடு மற்றும் ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக இதமான சாரல் மழை பெய்யத் தொடங்கியது.
காலை 8:00 மணி அளவில் மக்கள் தங்களது அன்றாடப் பணிகளுக்கு அவசர, அவசரமாகப் புறப்பட்ட நெருக்கடி மிகுந்த நேரத்தில் (Peak Rush Hours) இந்தச் சாரல் மழை பெய்ததால், சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நனைந்தபடியே தங்களது பயணத்தைத் தொடர்ந்தனர். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்ற மாணவ – மாணவிகள் குடைகளைப் பிடித்த படி சென்றனர்.

இதேபோல், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்லும் பணியாளர்களும் மழையில் அவதி அடைந்தனர் .
இந்தத் திடீர் சாரல் மழையின் காரணமாகக் கோவை மாநகரப் பகுதியில் நிலவி வந்த வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியதால் இதமான சூழலுக்கு மாறி உள்ளது.

காலை நேரத்தில் பெய்த இந்த மழையால் ஒருசில தாழ்வான சாலைகளில் லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட போதிலும், வெயிலின் கொடுமையில் இருந்து தங்களுக்குக் தற்காலிகக் நிவாரணம் கிடைத்து உள்ளதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.




