புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் விழுப்புரம் – நாகப்பட்டினம் இடையே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் காரைக்கால் அடுத்த பச்சூர் கீழபுத்தமங்கலம் கிராமத்தின் நடுவே தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் அந்த கிராமத்தில் இருந்து நகர பகுதிக்கு செல்வதற்கு சுரங்கப்பாதை அமைத்து தர மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்தனர்.

ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் தங்களது கிராமத்திலிருந்து நகரப் பகுதிக்கு செல்ல சுரங்கப்பாதை அமைக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் இன்று திடீரென்று தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தி மாவட்ட நிர்வாகம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறைக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது உடனடியாக தங்களது கிராமத்தில் இருந்து நகரப் பகுதிக்கு செல்ல சுரங்கப்பாதை அமைத்து தர நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தங்களது போராட்டம் தீவிரமடையும் என்று கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.




