காரைக்கால் மாவட்டத்தில் உள்ள உலக புகழ் பெற்ற காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை நினைவு கூறும் வகையில் நடைபெறும் மாங்கனித் திருவிழா வருகின்ற 27 ஆம் தேதி மாலை மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக 28 ஆம் தேதி காலை காரைக்கால் அம்மையார் திருக்கல்யாணம், 29 ஆம் தேதி சிவபெருமான் பிச்சாடண மூர்த்தியாக வலம் வரும்போது மாங்கனி வீசி பக்தர்கள் வழிபடுவது நிகழ்ச்சியும் நடைபெறுவுள்ளது.

இந்த நிலையில் மாங்கனி திருவிழா முன்னேற்பாடுகள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இன்று புதுச்சேரி மாநில அமைச்சர் ராஜசேகரன் தலைமையில் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் நாஜிம், சட்டமன்ற உறுப்பினர்கள் மீனாட்சி சுந்தரம், விக்னேஷ் முன்னிலையில் காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது மாங்கனி திருவிழாவில் பங்கேற்பதற்காக காரைக்கால் அம்மையார் ஆலயத்திற்கு வருகின்ற பக்தர்களுக்கு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து கோவில் நிர்வாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டனர். மேலும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகளை செய்து தர கோவில் நிர்வாக அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜசேகரன் அறிவுறுத்தினார்.




