• Sun. Sep 20th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

கோரிக்கை மனு பெற ஆட்சியர் மறுத்ததால் விவசாயிகள் திடீர் சாலை மறியல்..,

ByM.I.MOHAMMED FAROOK

Jun 16, 2026

அகில இந்திய விவசாயிகள் சங்கம் (AIKS) சார்பில் இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

கடந்த 2025 ஆம் ஆண்டுக்கான நெல்வளக் கொள்முதல் ஊக்கத்தொகையை ஏக்கருக்கு ரூ.6,000 ஆக உடனடியாக வழங்க வேண்டும், கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும், காரைக்கால் டெல்டா பகுதிக்கு உரிய 7 டி.எம்.சி. காவிரி நீரை பெற்றுத் தர வேண்டும், மேகதாது அணை கட்டுமான முயற்சியை தடுத்து நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடற்கரை சாலை சிங்காரவேலர் சிலையிலிருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தங்களது கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வழங்க விவசாயிகள் சென்றனர். ஆனால் மாவட்ட ஆட்சியர் மனுவை பெறவில்லை எனவும் விவசாயிகளை புறக்கணித்ததாகவும் குற்றம்சாட்டிய விவசாயிகள் திடீரென மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதுடன், சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைகாவல்துறையினர் கைது செய்தனர். இந்த திடீர் போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது.