• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

கோவை காங்கிரஸில் நீடிக்கும் உட்கட்சி மோதல்..,

BySeenu

Jun 1, 2026

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதி ஒதுக்கீடு மற்றும் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் கட்சிக்குள் முறைகேடுகள் நடந்துள்ளதாக எம்பி ஜோதிமணி பதிவிட்ட கருத்து, கோவையில் அக்கட்சியின் பெண் நிர்வாகிகளுக்கு இடையே பெரும் வார்த்தைப் போராக மாறியுள்ளது.

ஜோதிமணியின் பதிவுக்கு சிங்காநல்லூர் தொகுதி வேட்பாளர் ஸ்ரீநிதி எதிர்வினையாற்றிய நிலையில், அதற்கு தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் செயல் தலைவர் காயத்ரி கடுமையான கண்டனம் தெரிவித்தார்.செய்தியாளர்களிடம் பேசிய காயத்ரி, ஸ்ரீநிதி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து வந்தவர் என்றும், பாஜகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின்னரே உண்மைத் தன்மைகளை மறைத்துக் காங்கிரஸில் சீட் வாங்கினார் என்றும், தற்போது அவர் கட்சியிலிருந்து விலகிவிட்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

காயத்ரியின் இந்த அதிரடிக் குற்றச்சாட்டுக்குக் கட்சியின் வேட்பாளர் ஸ்ரீநிதி தான் கட்சியிலிருந்து விலகவில்லை என்று மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், காயத்ரி முன்வைத்த புகார்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,கோவையில் ஸ்ரீநிதி அவசரமாகப் பத்திரிகையாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.
பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஸ்ரீநிதி, சமூக வலைதளங்களில் தன்னை குறித்து சிலர் தொடர்ந்து திட்டமிட்டு அவதூறு பரப்பி வருவதாகக் கூறி வேதனை தெரிவித்தார்.காசு கொடுத்து சீட் வாங்கியதாகக் கூறப்படும் பொய்க் குற்றச்சாட்டுகளால் தனக்குக் கடும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தான் ஒரு முதல் தலைமுறை அரசியல்வாதி என்றும், காங்கிரஸ் தலைமை திறமையான வளர்ந்து வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையிலேயே தனக்கு சிங்காநல்லூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது என்றும் தெரிவித்தார்.காங்கிரஸ் கட்சியில் பல்வேறு கட்ட ஆலோசனைக் கமிட்டிகள் கூடி, பலமுறை பரிசீலித்த பின்னரே தகுதியானவர்களுக்குப் பதவிகளும் சீட்டுகளும் வழங்கப்படுகின்றன என்றும், அப்படி இருக்கையில் பணம் கொடுத்து சீட் வாங்கியதாகக் கூறுவது தன் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு அல்ல, அது ஒட்டுமொத்தமாகத் தலைவர் ராகுல் காந்தி மீதும் காங்கிரஸ் தலைமை மீதும் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றும், இது ஒட்டுமொத்த தலைமையையும் அசிங்கப்படுத்தும் செயல் என்றும் சாடினார்.

பாஜக மூத்த தலைவர் அண்ணாமலை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, அண்ணாமலை தனது கல்லூரியின் சீனியர் என்ற முறையில் ஒரு பொதுவெளியில் மட்டுமே அவரைச் சந்தித்ததாகவும், அதனைத் தவறான நோக்கத்தில் பேசுவது முற்றிலும் கண்டிக்கத்தக்கது என்றும் மறுப்பு தெரிவித்தார்.மேலும், தேர்தலில் பல்வேறு உள்ளடி வேலைகளுக்கு மத்தியிலும் கட்சி நிர்வாகிகளின் உழைப்பால் தான் இரண்டாம் இடத்தை ஒட்டி நல்ல வாக்குகள் பெற்றுள்ளதாகவும், தான் காங்கிரஸிலிருந்து விலகவில்லை என்றும், தொடர்ந்து கட்சியிலேயே நீடிப்பதாகவும் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

கட்சிக்குள் இருக்கும் சில நிர்வாகிகள் சுய விளம்பரத்திற்காகவும், வரவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் தான் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிடுவேன் என்ற பயத்திலும், பொறாமையிலும் இது போன்ற வதந்திகளையும் அவதூறுகளையும் பரப்பி வருவதாகச் சாடினார். ஜோதிமணியின் பதிவுக்குத் தான் பதிலளித்தது யாருக்கும் எதிராகக் குற்றம் சாட்டுவதற்காக அல்ல என்றும், தேர்தலில் ஒட்டுமொத்தமாகப் பண வியாபாரம் நடந்தது என்று பொதுவெளியில் கூறுவது தங்களைப் போன்ற இளம் வேட்பாளர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியதாலேயே அதற்கு விளக்கம் அளித்ததாகவும் கூறினார்.

கடந்த ஒரு வார காலமாகத் தன் மீதும், தனது குடும்பத்தின் மீதும் தொடர்ந்து கண்ணியமற்ற முறையில் அவதூறுகள் பரப்பப்படுவதால், இந்த அரசியலை விட்டே ஒதுங்கி, கட்சியை விட்டு விலகிவிடலாமா என்ற எண்ணம் கூட தனக்கு ஏற்படுவதாகத் தெரிவித்தார். தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இருந்து கொண்டு தமக்கு எதிராக உள்ளடி வேலைகளில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து விரிவான விசாரணை நடத்த ஒரு தனிக் குழு (கமிட்டி) அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான விளக்கங்கள் சம்பந்தப்பட்ட நிர்வாகிகளிடம் கேட்கப்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.வதந்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு மக்கள் நலனுக்கான அரசியலைச் செய்ய வேண்டும் என வலியுறுத்திய ஸ்ரீநிதி, தன் மீது தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்குத் தொடரப்போவதாக எச்சரித்துள்ளார். ஸ்ரீநிதியின் இந்த தற்போதைய பத்திரிகையாளர் சந்திப்பு கோவை மாவட்ட காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.