மதுரை மத்திய தொகுதியில் ஆவின் பால் முகவராக உள்ள இப்ராஹிம் என்ற நபர் வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகள் தற்போது,சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோ காட்சியில், ஆவின் பால் டிப்போ வைத்துள்ள முகவர்கள் கட்டிய பணத்தில் இருந்து கொண்டு வரப்படும் பால் பாக்கெட்டுகளில், ஆவின் லாரி ஓட்டுனர்கள் தினம் தினம் ஒன்று அல்லது இரண்டு பாக்கெட்டுகளை எடுத்து வைத்துக் கொள்கின்றனர். இது தொடர்பாக ஆவின் அதிகாரியிடம் நேரில் சென்று புகார் கொடுத்த நிலையிலும் கூட, அதிகாரிகள் லாரி ஓட்டுனருக்கு அந்த பால் பாக்கெட்டை நீ கொடுக்கவில்லை என்றால்.. அவர்கள் குண்டு ஊசியை வைத்து உனக்கு கொண்டு வரும் பால் பாக்கெட்களை சேதப்படுத்துவர் என்றும் அதற்கு நீ ஒழுங்காக அவர்களுக்கு இந்த பால் பாக்கெட் கொடு என்று மிரட்டுகின்றனர் என்று தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நம்மிடையே பேசிய ஆவின் பால் முகவர் இப்ராகிம்,
ஒரு கடைக்கு 50 ரூபாய் என வைத்தால் கூட தமிழகம் முழுவதும் இதுபோன்று பால் டிப்போக்களில் திருட்டு சம்பவம் நடைபெற்று வருகிறது என்றும் ஒரு பால் டிப்போவுக்கு 50 ரூபாய் என்றால் தமிழகத்தில் தற்போது 50,000 பால் டிப்போக்கள் இருக்கிறது. அப்படி என்றால் நாள் ஒன்றுக்கு 25 லட்ச ரூபாய் பால் ஆவின் முகவர்களிடம் கொள்ளையடிக்கப்படுகிறது என்று தெரிவித்தார். இது தொடர்பாக அதிகாரியிடம் சென்று புகார் தெரிவித்தால் கூட நடவடிக்கை இல்லை என்று தெரிவித்த இப்ராஹிம், தற்போது தவெக கட்சியில் மதுரை மத்திய தொகுதி வேட்பாளராக நிறுத்தப்பட்டு வெற்றி பெற்றுள்ள சட்டமன்ற உறுப்பினர் முஸ்தபா அவர்களிடம் புகார் கொடுத்துள்ளதாகவும், அவர் விரைவில் நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளதாக பேட்டியின் போது தெரிவித்தார்.
மேலும் ஆவின் பால் பாக்கெட் களை கொண்டு வரும் லாரியின் ஓட்டுநர்கள், நாங்கள் ஆளும் கட்சி அப்படித்தான் செய்வோம் என மிரட்டுவதாகவும் தெரிவித்தார். இந்த திருட்டு சம்பவம் உடனடியாக தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று, தமிழக முதல்வர் டாஸ்மாக் விற்பனை நிலையங்களில் எடுக்கப்பட்ட நடவடிக்கை போல், ஆவின் பால் டிபோக்களில் நடைபெறும் இந்த மோசடி கொள்ளை தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.




