திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள குஜிலியம்பாறை தாலுகா ஆர்.கோம்பை ஊராட்சியை இரண்டாக பிரித்து 17 கிராமங்களை உள்ளடக்கி
சின்னழகுநாயக்கனுார் ஊராட்சி புதிதாக தொடங்கப்பட்டது.

இங்குள்ள தாசமநாயக்கன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை கடந்த மாதம் மார்ச் 14ல் திறக்கப்பட்டது.
இந்த கடைக்கு உட்பட்டு வைரப்பெருமாள் பிள்ளையூர், மலையடிவார
பகுதிகளை சேர்ந்த 123 ரேஷன் கார்டுகள் உள்ளன.
கடை திறந்த 2 நாட்களுக்கு பிறகு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. அதன் பிறகு வாரம் இருமுறை திறக்க வேண்டிய இந்த கடை கடந்த 40 நாட்களாக திறக்கப்படவில்லை.

இதனால் ரேஷன் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் தவிக்கின்றனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி குஜிலியம்பாறை வட்டாரத் தலைவர் ஆர்.கோம்பை வி.தர்மர் கூறியதாவது:
ரேஷன் பொருட்கள் வழங்காதது குறித்து கடை ஊழியரிடம் கேட்டால் பொருட்கள் இறக்க உத்தரவு வரவில்லை. மேலும் பொருட்களை கொண்டு வந்து இறக்க ரூ.1500 செலவாகிறது. யார் கொடுப்பது என்கிறார்கள். இப்படி இருக்க அதனை எதற்கு கடை திறந்தார்கள் என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர். பெயரளவில் திறக்கப்பட்ட ரேஷன் கடையை பொதுமக்கள் நலன் கருதி கடையை திறந்து பொருட்களை விரைந்து வழங்க வேண்டும் என்றனர்.




