திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் பகுதியில் நெல் விவசாயிகள் அதிகம். குதிரை குளிப்பாட்டி, காமராஜர் அணையின் நீர்வரத்து பகுதிகளில் நெல் பயிர்களை விவசாயிகள் அதிகம் பயிரிடுவது வழக்கம்.

மழை காலங்களில் தங்களது நிலங்களில் இருந்து அறுவடை செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் டிராக்டர், வேன் மற்றும் லாரிகள் மூலம் கொண்டு வருவதற்கு மிகவும் சிரமப்பட்டனர். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களிடம் விவசாய விளைபொருட்களை கொண்டுவர தண்ணீர் வரத்து சிமிண்ட் வாய்க்கால் குறுக்கே தரைப்பாலம் அமைத்துக் கொடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

உடனே அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் ரூ. 40 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் கட்டிக்கொடுக்க உத்தரவிட்டார். அதன்படி 6 மீட்டர் அகலம் 7 மீட்டர் நீளத்துடன் தரைப்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறுகையில் அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்கள் எங்களது கோரிக்கையை ஏற்று ரூ. 40 லட்சம் மதிப்பில் தரைப்பாலம் கட்டுவதற்கு நடவடிக்கை எடுத்ததற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

நெல் மூட்டைகள் லாரியின் மூலம் ஏற்றிவரும்போது அதிக பாரம் இருக்கும். அதனால் தரைப்பாலம் தரமானதாக கட்டிக்கொடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிடவேண்டும், பொறியாளர்கள் அடிக்கடி ஆய்வு செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகள் ஆய்வு செய்து தரைப்பாலம் தரமானதாக கட்டிக்கொடுக்க நடவடிக்கை எடுப்பார்கள் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.




