விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சத்திரப்பட்டியில் கண்ணன் என்பவருக்கு சொந்தமான எக்ஸெல் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இதில் 20-க்கும் மேற்பட்ட அறைகளில் 60 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. தொடர்ந்து நான்கு முறை பட்டாசுகள் வெடித்து சிதறியதால் விண்ணை முட்டும் அளவிற்கு புகை வெளியானது. சுமார் 6 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு அதிர்வு ஏற்பட்டதால் ஏற்பட்டதால் அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் பீதியடைந்தனர். தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து சிதறியதால் தீயணைப்புத் துறையினர் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது . இதையடுத்து விபத்தில் காயல்பட்டி கலைஞர் காலனியை சேர்ந்த பாண்டி 38, என்ற தொழிலாளி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
காயமடைந்த ராஜ்குமார் 42, செல்வம் 33, ரமேஷ் 42, கருப்பசாமி, சாத்தி, 15வயது சிறுமி சந்தியா, ஜான்சிராணி, ஜெயா, ராமலட்சுமி ஆகிய 9 தொழிலாளர்களை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதில் 10க்கும் மேற்பட்ட அறைகள் தரைமட்டமானது. மேலும் பட்டாசு ஆலை வளாகத்திற்குள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தது. சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். வெடி விபத்து ஏற்பட்ட ஆலையில் சிவகாசி சார் ஆட்சியர் முகமது இர்பான் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா ஆகியோர் ஆய்வு நடத்தினர்.

விசாரணையில், வெடி விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் உரிமம் புதுப்பிக்கப்படாமல் செயல்பட்டு வந்த அதிர்ச்சி தகவல் விசாரணையில் தெரியவந்தது. கடந்த 2021ம் ஆண்டுக்குப் பின் ஆலையின் உரிமம் புதுப்பிக்கப்படவில்லை என்பது வருவாய் துறை மற்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.





