விருதுநகர் மாவட்டம் சிவகாசி அடுத்த தாயில்பட்டி அருகே உள்ள கணஞ்சாம்பட்டி கிராமத்தில் கிழக்கு தெரு உள்ளது. இப்பகுதியில் புதிய தமிழகம் கட்சியை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர்.

நேற்று இரவு திமுக கட்சியினர் அதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா மற்றும் கூட்டணி கட்சியினர் தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக கிழக்கு தெரு பகுதியில் செல்ல முயற்சி செய்தனர். அப்போது அப்பகுதியை சேர்ந்தவர்கள் எங்கள் பகுதியில் புதிய தமிழகம் கட்சியினரை தவிர வேறு கட்சியை சேர்ந்தவர்களுக்கு பிரச்சாரம் செய்ய அனுமதி இல்லை என எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பிரச்சாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோவன் அனைத்து கட்சியினரும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டுமென கூறினார்.

ஆனால் அப்பகுதியை சேர்ந்தவர்கள் தொடர்ந்து எங்கள் பகுதியில் வேறு கட்சியினர் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க மாட்டோம் என தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்ததால் வேறு வழியின்றி பிரச்சாரம் செய்ய முடியாமல் கட்சியினர் திரும்பி சென்றனர். எதிர்ப்பு தெரிவித்த வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது.




