பல்லாவரம் தொகுதியில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற கூட்டணியின் சார்பில் தேமுதிக வேட்பாளர் அனகை டி. முருகேசன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இதற்காக பல்லாவரம் பகுதியில் அமைந்துள்ள படவேட்டமன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பின்னர், திமுக சட்டமன்ற உறுப்பினர் இ. கருணாநிதி மற்றும் கூட்டணி கட்சியினருடன் மேளதாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு, பொதுமக்களிடம் ஆதரவு கோரினார்.

இந்த ஊர்வலம் பல்லாவரம் முக்கியச் சாலைகள் வழியாக சென்று, இறுதியாக பல்லாவரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அடைந்தது. அங்கு அதிகாரிகள் முன்னிலையில் அனகை டி. முருகேசன் தனது வேட்புமனுவை முறையாக தாக்கல் செய்தார்.
வேட்புமனுத் தாக்கலுக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தன்னைத் தேர்ந்தெடுத்த கூட்டணி கட்சிகளுக்கும், முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களுக்கும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
பல்லாவரம் தொகுதியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் செயல்படுத்தப்பட்ட வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் எடுத்துரைத்து ஆதரவு கோருவேன் என்றும், மேற்கொள்ள வேண்டிய பணிகளை நிறைவேற்ற மக்கள் ஆதரவு தேவை எனவும் அவர் கூறினார்.
கூட்டணியின் வலிமையுடன் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.

இந்த நிகழ்வில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் இ. கருணாநிதி, தேமுதிக மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொண்டர்கள் கலந்து கொண்டு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.
வேட்புமனுத் தாக்கலுக்கு முன்பும் பின்னரும் நடைபெற்ற ஊர்வலத்தால் பல்லாவரம் பகுதியில் தேர்தல் சூழல் உற்சாகமடைந்துள்ளது. இதன் மூலம் தொகுதியில் அரசியல் போட்டி மேலும் தீவிரமடைந்துள்ளது.



