புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் பெருங்குடி ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் பங்குனி மாத தேர் திருவிழா நடைபெற்றது. விழாவில் பழங்களாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்ட திருத்தேரை ஏராளமான பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து நேர்த்திகடன் செலுத்தினர்.

புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அருகே உள்ள பெருங்குடி ஸ்ரீ வேண்டிவந்த அம்மன் கோயில் பங்குனி திருவிழா கடந்த 15ம் தேதி பூச்சொரிதல் விழா நடைபெற்றது . அதனைத்தொடர்ந்து 23ம் தேதி காப்பு கட்டுதலுடன் முதல் நாள் திருவிழா தொடங்கியது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு சமுதாயத்தவரின் மண்டகப்படி நடைபெற்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாள் இரவும் கோவிலின் முன்பு அமைந்துள்ள கலையரங்கத்தில் கதம்பம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பெருங்குடி முனீஸ்வரர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்தும், குழந்தைகளுக்கு தொட்டில் கட்டியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரானது ஸ்ரீ வேண்டி வந்த அம்மன் கோயில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதி, வழியாக வந்து கோயிலை அடைந்தது. விழாவில் பெருங்குடி, பாப்பான்பட்டி, கொள்ளக்குடி, குருந்தடிபாலம்பட்டி, பூவம்பட்டி, நெய்வாசல்பட்டி, வண்ணியம்பட்டி, கூத்தம்பட்டி, சேப்பிளாம்பட்டி, மேனாம்பட்டி, முனசந்தை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.





