விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 39 வார்டுகளில் உள்ள திமுக மற்றும் அதன் கூட்டணி கவுன்சிலர்கள் மூலம் பொது மக்களுக்கு பரிசு பொருட்கள் விநியோகம் செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதனை அடுத்து அதிமுக மற்றும் பாஜகவினர் பழைய பேருந்து நிலையத்தில் சென்று பார்த்தபோது அங்குள்ள அறையில் இருப்பு வைக்கப்பட்டிருந்த விளையாட்டு உபகரணங்கள் ஆட்டோ மூலம் ஒவ்வொரு பகுதிகளுக்கும் பிரித்து எடுத்து செல்லப்படுவது தெரிய வந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜகவினர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சில பகுதிகளில் நகராட்சி வாகனம் மூலம் துப்புரவு பணியாளர்களே பரிசுப் பொருட்களை கொண்டு சென்றதாகவும் குற்றம் சாட்டினர்.
அப்போது அங்கு வந்த நகராட்சி ஆணையாளர் நாகராஜனிடம் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவினர் புகாரை தொடர்ந்து 13வது வார்டு திமுக கவுன்சிலர் ஷாலினி சரவண கண்ணன் வீட்டில் பொது மக்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த கிரிக்கெட், சிலம்பம், கேரம் போர்டு உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் முதல்வர் ஸ்டாலின், கலைஞர் கருணாநிதி படம் பொறித்த டீசர்ட் மற்றும் தொப்பிகளை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் 14 வது வார்டு திமுக கவுன்சிலர் அர்ச்சனா வீட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கான ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள், டி சர்ட், தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து பாஜக.மற்றும் அதிமுகவினர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள இன்னும் திறக்கப்படாத 20 க்கும் மேற்பட்ட கடைகளில் நகர்மன்ற உறுப்பினர்கள் பல லட்சக்கணக்கான பரிசு பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக கூறி அந்த பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் குவிந்து வருகின்றனர். அதிகாரிகள் இதை அனைத்தையும் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுக்கும் வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என்பதாக கூறப்படுகிறது இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




