அரியலூர் மாவட்டம் திருமானூரில், அரியலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாரியம்மாள் அவர்களின் ஆலோசனைப்படி இளைஞர் காங்கிரஸ் மாவட்ட செயற்குழு கூட்டம் தலைவர் பாளை எம்.ஆர். பாலாஜி தலைமையில் நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக திருமானூர் நகர தலைவர் டி.வினோதன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் நிக்கோலஸ் ராஜ், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜீ ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் இந்திய விவசாயிகளுக்காக போராட்டம் நடத்திய தேசிய இளைஞர் காங்கிரஸ் தலைவர் உதய்பானுசிங் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இருந்து தேசப் பிதா என போற்றப்படும் மகாத்மா காந்தியின் பெயரை நீக்கிய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும், நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் அரியலூர் சட்டமன்ற தொகுதியில் சிறப்பாக களப்பணியாற்றி வரும் இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு போட்டியிட தேசிய தலைமை வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அத்துடன், அரியலூர் முதல் திருமானூர் வரை அமைக்கப்பட்டுள்ள புதிய தார்சாலையில் நடுவே வெள்ளைக் கோடு உடனடியாக வரையப்பட்டு விபத்துகளைத் தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரியலூர் டெல்டா பகுதிகளில் நெல் கொள்முதல் நிலையங்களை அதிகரித்து விவசாயிகளின் நெல் மூட்டைகளை தாமதமின்றி பெற மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது.
மேலும் திருமானூர் அரசு பள்ளி முன்பு காலை மற்றும் மாலை நேரங்களில் மாணவர்கள் பாதுகாப்பாக சாலை கடக்க போக்குவரத்து போலீஸ் ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் சாம் வர்கீஸ், மாவட்ட துணைத் தலைவர்கள் சுண்டக்குடி கலைவாணன், ஆனந்தராஜ், ஜெயங்கொண்டம் நகர தலைவர் ஐசக் நியூட்டன், திருமானூர் வட்டார நிர்வாகிகள் அருண், ஆனந்த், அரவிந்த் உள்ளிட்ட இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். கூட்ட முடிவில், திருமானூர் வட்டார இளைஞர் காங்கிரஸ் தலைவர் டி. பாரதி நன்றி கூறினார்.







