கோவையில் பேருந்து பயணத்தின் போது, கூலித் தொழிலாளி ஒருவர் பையில் வைத்து இருந்த ₹5.20 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் ‘ஃபெவிக்விக்’ (Fevikwik) பசையைப் பயன்படுத்தி மிக நூதனமான முறையில் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கோவை, நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ரவி (50). இவரது மனைவி சாந்தி நல்லாம்பாளையத்தில் ரவி சொந்தமாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பணம் தேவைப்பட்டது. இதனால் ரவி தனது சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம், கீழநிலைக்கோட்டையில் உள்ள இந்தியன் வங்கியில் இருந்து தனது சேமிப்புப் பணம் மற்றும் மனைவியின் நகையை அடகு வைத்த பணம் என மொத்தம் ₹5.20 லட்சத்தை எடுத்துக் கொண்டு கடந்த பிப்ரவரி 18-ஆம் தேதி இரவு தனியார் பேருந்தில் ரவி கோவைக்கு வந்தார். பணத்தை பைக்குள் மறைத்து வைத்து இருந்தார்.

அந்தப் பேருந்து பல்லடம் பகுதியில் பேருந்து நின்ற போது கூடப் பணம் பத்திரமாக இருப்பதை ரவி உறுதி செய்து உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 19 அதிகாலை 4:45 மணிக்கு கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இறங்கிய ரவி, தனது பையைத் திறக்க முயன்ற போது பையின் ஜிப் (Zip) திறக்க முடியாதபடி வலுவான பசை (Fevikwik) கொண்டு ஒட்டப்பட்டு இருந்தது. பதற்றம் அடைந்த ரவி, அருகில் இருந்த கடையில் கத்தியை வாங்கி, கத்தியால் பையைக் கிழித்துப் பார்த்த போது உள்ளே இருந்த ₹5.20 லட்சம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து காட்டூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறை விசாரணை ரவிக்கு பின்னால் அமர்ந்து பயணித்த இரண்டு நபர்கள் கைப்பேசி எண்கள் சுவிட்ச் ஆஃப் செய்து வைக்கப்பட்டு இருந்தது. திருடிய நபர்கள் பேருந்தில் இருந்து இறங்கிச் செல்லும் வரை ரவி திறந்து விடக் கூடாது என்பதற்காக அந்த நபர்கள் அதில் ஃபெவிக்விக் போட்டு ஒட்டி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பேருந்து பயணியிடம் நூதன முறையில் ஃபெவிக்விக் பயன்படுத்தி ரூபாய் 5.20 லட்சம் திருடப்பட்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.







