தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு சென்னை தாம்பரம் அடுத்த மாடம்பாக்கத்தில் உள்ள ட்ரைலீவ்ஸ் பள்ளி குழுமத்தில் ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தாளாளர் திரு. சரவணன் மற்றும் திருமதி பரமேஸ்வரி பெரியநாயகி சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தனர்.
ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தின் மூலம் மலர்களும் கத்தரிக்கோலும் கொண்டு வந்து கண்காட்சி தொடங்கப்பட்டது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக அமைந்தது.

தொடர்ந்து அவர்கள் மாணவர்கள் உருவாக்கிய பல்வேறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப திட்டங்களை பார்வையிட்டு, அவற்றின் செயல்முறை குறித்து மாணவர்களிடமிருந்து விளக்கங்களை கேட்டறிந்தனர்.
இந்த ஹாக்கத்தான் கண்காட்சியில் மாணவர்கள் தங்களது படைப்பாற்றலை வெளிப்படுத்தும் வகையில், ரோபோடிக்ஸ், தானியங்கி கருவிகள், அன்றாட வாழ்க்கையில் பயன்படும் அறிவியல் முறைகள் உள்ளிட்ட பல்வேறு புதுமையான கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். ஒவ்வொரு மாணவரும் தங்களது திட்டங்களை தாமே வடிவமைத்து, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி செயல்படுத்தியிருந்தது பார்வையாளர்களை கவர்ந்தது.

மாணவர்கள் இத்தகைய அறிவியல் கண்காட்சிகளில் கலந்து கொள்வது, அவர்களின் சிந்தனை திறன் மற்றும் புதுமை உணர்வை வளர்க்கும் என்றும், எதிர்கால கண்டுபிடிப்பாளர்களை உருவாக்கும் முயற்சியாக இது அமையும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்தது.
மேலும், கல்வியுடன் சேர்த்து கராத்தே, யோகா போன்ற உடற்கல்வி பயிற்சிகள், ஓவியம், நடனம் போன்ற திறன் மேம்பாட்டு வகுப்புகளுக்கும் பள்ளியில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த ரோபோடிக்ஸ் ஹாக்கத்தான் கண்காட்சி, மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தும் சிறப்பான நிகழ்வாக அமைந்தது.







