விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் திருவள்ளுவர் மன்றத்தின் 60-ஆம் ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

இராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் உள்ள மன்றத்தில் காலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் கலந்து கொண்டு கொடியேற்றி குத்து விளக்கேற்றி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து, விழாவை துவக்கி வைத்தார்.
திருவள்ளுர் மன்ற நிறுவனர் புலவர் முத்தரசு விழாவில் பங்கேற்று சிறப்பு செய்தார். விழாவில் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் பேசியதாவது:

தற்போதைய இளைய தலைமுறையினர் தகவல் தொழில்நுட்பங்களால் திசை மாறி செல்கின்றனர். சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் மூவாயிரத்திற்கும் மேல் இருந்து வருகிறார்கள். இதற்கு தீர்வுதான் என்ன. பெரிய தொழில் அதிபர்களாகவோ, வழக்கறிஞராகவோ, மருத்துவராகவோ மாறவேண்டும் என்ற எண்ணம் வேண்டாம். முதலில் மனிதர்களாக மாற வேண்டும். என்பதே இன்றைய இலக்காகும். மனிதனாக மாற்றுவது தான் கல்வி. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் திருக்குறளை கட்டாய பாடம் ஆக்க வேண்டும். அறத்துப்பால், பொருட்பால், போன்ற வேலை கட்டாயம் கற்பித்தே ஆக வேண்டும், இன்றைய தலைமுறையை சீர்படுத்த வேண்டியது நமது கடமை ஆகும். அதற்கு திருக்குறள் ஒன்றே தான் தீர்வாகும்.

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் உலக வாழ்க்கைக்கும் முக்கியமாக தேவைப்படுவது தற்போதைய தீர்வு திருக்குறள் ஒன்றே என பேசினார். விழாவில் திருக்குறள் குறித்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அடிகளார் வழங்கி பாராட்டினார். முடிவில் முத்துமாணிக்கம் நன்றி கூறினார். மாலையில் தேனினும் இனிய திருக்குறள் என்ற தலைப்பில் புலவர் ராமலிங்கம் தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது.






