கமல்ஹாசன் நேற்று பாராளுமன்றத்தில் பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அவர் பேசியது புரியாததால் தான் கோவை மக்கள் ஏற்கனவே அவரை சட்டமன்ற தேர்தலில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.

கோவை சங்கனூர் பகுதியில் பா.ஜ.க சார்பில் மோடி முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சாலையோர வியாபாரிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியதாவது,
ஒவ்வொரு வீட்டுக்கும் நேரில் சென்று பா.ஜ.க நிர்வாகிகள் மக்களின் குறைகளை கேட்டறிய ஒரு புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. அந்த செயலி மூலம் மக்களின் எதிர்பார்ப்புகள் மற்றும் கோரிக்கைகள் பதிவு செய்யப்பட்டு, அவை கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்படும் என தெரிவித்தார்.
மோடி முகாம் என்ற இந்த முகாம், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஒருங்கிணைந்து முதல் முறையாக நடத்தப்படுவதாகவும், ஏற்கனவே நூற்றுக்கணக்கான முகாம்கள் நடந்தாலும் இந்த வடிவம் புதுமையானதாக இருப்பதாகவும் கூறினார்.
இந்த முகாமில் காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படுவதாகவும், 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு உடனடியாக காப்பீட்டு அட்டைகள் வழங்கப்படுவதாகவும், அதேபோல் நலவாரிய அட்டைகளும் உடனடியாக வழங்கப்படுவதாகவும் விளக்கினார். மேலும் செல்வமகள் திட்டத்திலும் பயனாளிகள் உடனடியாக இணைக்கப்படுவதாகவும், அதன் முதல் தவணை இந்த முகாமிலேயே தொடங்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
தான் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்யும் என்றும், தி.மு.க தேர்தல் அறிக்கையின் நகலாக அ.தி.மு.க வாக்குறுதிகள் இருப்பதாக கூறுவது தவறு என்றும், அதனை தி.மு.க வாக்குறுதிகளின் இரண்டாம் பதிப்பு என கூறுவது சரியல்ல என்றும் அவர் தெரிவித்தார்.
மோடி முகாமில் அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயனடையலாம் என்றும், பொதுப் பிரச்சனைகளுக்காக மக்கள் தங்களை நேரடியாக அணுகி வருவதாகவும் கூறினார். தற்போதைய திராவிட மாடல் அரசு தோல்வியடைந்த மாடல் அரசு என்பதைக் மக்கள் உணர்ந்துள்ளதாகவும், எப்போது இந்த ஆட்சிக்கு முடிவு கட்டுவீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பி வருவதாகவும் தெரிவித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் மீண்டும் ஆட்சியை பிடிப்போம் என கனவில் இருப்பதாக விமர்சித்த வானதி சீனிவாசன்,மக்களுக்கும் பா.ஜ.கவுக்கும் ஒரு கனவு உள்ளது, அது தற்போதைய ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது தான் என கூறினார்.
கமல்ஹாசன் நேற்று பேசியது தனக்கு புரியவில்லை என்றும், அவர் பேசியது புரியாததால் தான் கோவை மக்கள் ஏற்கனவே அவரை அரசியலில் இருந்து அனுப்பி விட்டார்கள் என்றும் விமர்சித்தார்.
மேலும், ஊடக நண்பர்கள் எந்தவித அதிகாரத் தலையீடும் இல்லாமல் சுதந்திரமாக செய்தி சேகரிக்க வேண்டும் என்பதே பா.ஜ.க கனவு என்றும் தெரிவித்தார். பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சட்டமன்றத்துக்குள் வர வேண்டும் என்பது கட்சியின் விருப்பம் என்றும், அவரது தந்தையின் உடல்நிலை காரணமாக அவர் சில முடிவுகளை தெரிவித்துள்ள நிலையில், அதனை அரசியல் ரீதியாக பூதாகரமாக மாற்றுவது தவறு என்றும், இதில் எந்த அரசியலும் இல்லை என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.










