தமிழக வெற்றி கழகம் (தவெக) கட்சிக்கு விசில் சின்னம் கிடைத்துள்ளதையடுத்து, தமிழகமெங்கும் அந்த சின்னம் வேகமாகப் பிரபலமாகி வருவதாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை தாம்பரம் சண்முகம் சாலையில் நடைபெற்ற செங்கல்பட்டு மாவட்ட தவெக கட்சியின் மூன்றாம் ஆண்டு துவக்கம் மற்றும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம், மாவட்டத் தலைவர் கில்லி சரத் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று சிறப்புரையாற்றிய புஸ்ஸி ஆனந்த், “விசில் சின்னம் பட்டி தொட்டி எங்கும் சென்றுவிட்டது. இருந்தாலும், தேர்தல் வரை தொண்டர்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

மேலும், “மற்ற கட்சியினர் கூட்டத்தில் கூட நன்றாக பேசினால், அங்கேயே விசில் அடித்து நமது சின்னத்தையே பிரபலப்படுத்த முடியும்,” எனக் கூறினார். இதைக் கேட்ட தொண்டர்கள் விசில் அடித்து உற்சாக ஆரவாரம் செய்தனர்.
“நாம் பேசுவது கேட்குதோ இல்லையோ, விசில் சத்தம் மட்டும் அதிகமாகிவிட்டது,” என நகைச்சுவையாகக் குறிப்பிட்டார்.
தொடர்ந்து, “விசில் சின்னம் ஒதுக்கப்பட்டதால் விசில் தயாரிப்பாளர்கள் கொடுத்துவைத்தவர்கள். தமிழகமெங்கும் விசில் தட்டுபாடு ஏற்பட்டுள்ளது,” என்றும், “தலைவர் விசில் ஊதினால் உலகமே கேட்கும்; மே மாதத்தில் முதல்வராக பதவியேற்கும் போது அந்த விசில் சத்தம் தமிழ்நாடு முழுவதும் கேட்கும்,” என்றும் தெரிவித்தார்.
கூட்டத்தின் முடிவில், புஸ்ஸி ஆனந்துக்கு தெர்மாகோலில் செய்யப்பட்ட பெரிய விசில், நினைவுப் பரிசாக வேல், செங்கோல் உள்ளிட்டவைகளை நிர்வாகிகள் வழங்கினர்.










