கோவை, மாநகர போக்குவரத்து கழகத்திற்கு உட்பட்ட அரசு பஸ் கடந்த 15 ஆம் தேதி ஆர் எஸ் புரம் சென்று கொண்டு இருந்தது. அந்த பஸ்ஸில் வடவள்ளியைச் சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க பயணியும் பயணம் செய்து உள்ளார். அந்த பஸ். பேருந்து ஆர்.எஸ்.புரம் அருகே சென்ற போது, அந்த பயணிக்கு திடீரென கடும் நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், பேருந்தை இயக்கிய ஓட்டுநரும், நடத்துனரும், அந்த நபருக்கு உரிய முதலுதவி அளிக்காமலும், மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமலும் அவரை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரமாக படுக்க வைத்து விட்டு பேருந்தை எடுத்து சென்று விட்டதாக புகார் எழுந்தது.
சாலையில் இறக்கி விடப்பட்ட அந்த பயணியை அங்கு இருந்த பொதுமக்கள் கவனித்து உடனடியாக 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு தகவல் தெரிவித்தனர். . பிறகு அவர் ஆம்புலன்ஸ் மூலம், கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார்.
ஓடும் பேருந்தில் நெஞ்சுவலி ஏற்பட்ட பயணியை காப்பாற்றாமல் சென்ற கண்டக்டர் மற்றும் டிரைவர் குறித்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார். இதுகுறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகள் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட நடத்துனர் சரவணன் என்பவரை பணியிடை நீக்கம் செய்ததாக தெரிவித்து இருந்தனர்.
ஓடும் பேருந்தில் அந்த பயணி குடிபோதையில் இருந்ததாகவும், அதனால் அவரை இறக்கி விட்டு சென்றதாகவும் போக்குவரத்து ஊழியர்கள் தரப்பில் கூறப்பட்டது.
இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த பயணி தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
அவர் யார் ? என்ற விவரம் இதுவரை தெரியவில்லை.






