கார் ரேஸில் வெற்றி பெற்ற நடிகர் அஜித்குமாருக்கும், அரசியல் களத்தில் செயல்படும் நடிகர் விஜய்க்கும், நடிகர் அருண் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ரெட்ட தல’ திரைப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்றது.இந்த படத்தில் அருண் விஜய், சித்தி இத்னானி, தன்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பெரடி, யோகேஷ் சாமி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கிரிஷ் திருக்குமரன் இயக்கத்தில், சாம்.சி.எஸ் இசையமைத்துள்ள இந்த படத்தை பிடிஜி யூனிவர்சல் சார்பில் பாபி பாலச்சந்திரன் தயாரித்துள்ளார்.டிசம்பர் 25ஆம் தேதி ‘ரெட்ட தல’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் அருண் விஜய், பேஷன் (Passion) விஷயத்தில் நடிகர் அஜித்தை பின்பற்றுவதாகவும், அரசியல் (Political) செயல்பாடுகளில் நடிகர் விஜயை பின்பற்றுவதாகவும் கூறினார். இருவருமே தனக்கு ஊக்கமாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

‘ரெட்ட தல’ படம் குறித்து பேசிய அவர், இந்த படத்தின் கதை தன்னை மிகவும் கவர்ந்ததாகவும், சவாலான கதாபாத்திரமாக இருந்ததால் இதில் நடிக்க முடிவு செய்ததாகவும் கூறினார். படத்தின் முக்கிய தூணாக எடிட்டர் ஆண்டனி இருந்ததாகவும், படம் வேகமாகவும் துல்லியமாகவும் உருவாக காரணமாக இருந்தார் என்றும் பாராட்டினார். நடிகை சித்தி இத்னானி முழு உழைப்பை கொடுத்துள்ளதாகவும், அதிக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த இந்த படம் சிறப்பாக வந்துள்ளதாகவும் அருண் விஜய் தெரிவித்தார்.
நடிகை சித்தி இத்னானி கூறுகையில், இந்த கதையில் நடித்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், தன்னுடன் நடித்த அனைத்து சக கலைஞர்களுக்கும் நன்றியை தெரிவித்தார். அதிக ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த, ஹாலிவுட் தரத்தில் உருவான இந்த படம், இந்த கிறிஸ்மஸ் அன்று ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் ‘இரட்டை தல கிறிஸ்மஸ்’ ஆக இருக்கும் என தெரிவித்தார்.




