• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

கழிவு நீர் கால்வாயில் விழுந்த சினை மாடு பத்திரமாக மீட்பு..,

ByKalamegam Viswanathan

Dec 8, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தான் மேலப்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் வீராயி இவர் தனது வாழ்வாதாரத்திற்காக பசுமாட்டினை தனது வீட்டில் வளர்த்து வருகிறார். இந்த பசுமாடு தற்போது சினை பருவத்தில் இருப்பதாக கூறப்படும் நிலையில் தனது சினை மாட்டினை சோழவந்தான் பேரூராட்சி மயான பகுதி அருகில் வைகை ஆற்று பகுதியில் மேய்ச்சலுக்காக அழைத்து சென்ற போது மயானம் அருகே தேங்கி இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கால்வாயில் விழுந்த பசுமாடு உயிர் பிழைப்பதற்காக கழிவுநீரில் படுத்து போராடிக் கொண்டிருந்தது. தனது வாழ்வாதாரமே பாதிக்கப்படும் நிலையில் பசு மாட்டின் உரிமையாளர் வீராயி கால்வாயில் விழுந்த பசு மாட்டினை காப்பாற்ற சொல்லி அருகில் இருந்தவர்களை அழைத்துள்ளார்.

இந்த நிலையில் அங்கு வந்த அந்த பகுதி இளைஞர்கள் பசுமாட்டை மீட்க முயற்சி செய்தும் முடியாத நிலையில் சோழவந்தான் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சோழவந்தான் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துக்குமரன் மற்றும் போக்குவரத்து நிலைய அலுவலர் நாகராஜன் மற்றும் பணியாளர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பசு மாட்டை கயிறு கட்டி பத்திரமாக மீட்டனர்.

தீயணைப்பு நிலைய அலுவலர்களுடன் அந்த பகுதியை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்டோர் பசுமாட்டின் இடுப்பு மற்றும் கழுத்து பகுதிகளில் கயிறு கட்டி கழிவுநீர் கால்வாயில் இருந்து மேலே பத்திரமாக மீட்டெடுத்தனர். அனைவருக்கும் நன்றி தெரிவித்த வீராயி தனது வாழ்வாதாரமே இந்த சினை பசு மாடு தான் இதை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.