• Tue. May 5th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

எஸ்ஐஆர் விண்ணப்பப் படிவத்தை கட்சியினரிடம் கொடுக்கக் கூடாது..,

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (எஸ்.ஐ.ஆர்) விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சியினரிடம் கொடுக்க கூடாது என்று மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகளில் ஈடுபடும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், விண்ணப்பப் படிவத்தை அரசியல் கட்சி வாக்குச்சாவடி நிலை முகவர்களிடம் கொடுக்கவோ, பெறவோ கூடாது என வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத்திடம் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.சண்முகநாதன், கடம்பூர் ராஜு எம்எல்ஏ ஆகியோர் மனு அளித்தனர்.

அதன் விவரம்: தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு, தமிழகம் முழுவதும் வீடு வீடாகச் சென்று விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

ஒரு மாதம் நடைபெறும் இப்பணியில் பிஎல்ஓ-க்கள் அரசியல் கட்சி சார்பில் நியமிக்கப்பட்டுள்ள பிஎல்ஏ-க்களிடம் ஒரு நாளைக்கு 50 விண்ணப்ப படிவத்தை வாக்காளர்களிடம் இருந்து பூர்த்தி செய்து பெறலாம் என அறிவுறுத்தப்பட்டது.

இது முறைகேடுகளுக்கு வழிவகுக்கும் எனவும், எஸ்.ஐ.ஆர்.-இன் நோக்கம் முழுமையாக நிறைவேற வேண்டும்; அதில் எவ்வித குளறுபடியும் நிகழக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.

மனு அளிக்கும் நிகழ்வில் மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் எம்எல்ஏ மோகன், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் ஆறுமுக நயினார், மாநில அமைப்புசாரா ஓட்டுநர் அணி இணைச் செயலர் பெருமாள்சாமி, மாநில வழக்குரைஞர் பிரிவு துணைச் செயலர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு, முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் இரா.சுதாகர், மாவட்ட ஜெ.பேரவைச் செயலர் விஜயகுமார், எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் எம்.பெருமாள், மாவட்ட மாணவரணிச் செயலர் பில்லா விக்னேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.” இதனை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்தார்!