ஆந்திராவில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 5 பெண்கள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள அஸ்வரா பேட்டையில் இருந்து ஜங்காரெட்டிகுடேம் நோக்கி 30 பயணிகளுடன் மாநில அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. ஜங்காரெட்டிகுடம் மண்டலத்தில் உள்ள ஜில்லருவாகு என்ற இடத்தில் பஸ் சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகி ஆற்றிற்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.தகவல் அறிந்த போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பயணிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதில், 21 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு, அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்தில், 5 பெண்கள் உட்பட 9 பேர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகி உள்ளது. மீட்கப்பட்ட உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. இந்த விபத்து ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.