• Fri. Apr 26th, 2024

தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்

Byமதி

Dec 15, 2021

சசிகலா அவர்கள் எம்.ஜி.ஆரின் பாடலை மேற்கோள் காட்டி, தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் சசிகலா.அந்த கடிதத்தில் தன்னை அதிமுக பொதுச்செயலாளர் எனக்குறிப்பிட்டு வெளியிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில், ‘உழைப்பும், உண்மையும், விசுவாசமும் இருந்தால் மட்டும் போதும், வாழ்வின் உச்ச நிலையை கடைக்கோடி தொண்டரும் அடைய முடியும் என்பதை நம் இயக்கத்தின் இருபெரும் தலைவர்களும் நிரூபித்து சென்றுள்ளார்கள். இந்த இயக்கத்தின் வேர்களாகவும், விழுதுகளாகவும் விளங்கும் அடிப்படைத் தொண்டர்களின் வாழ்வு மலரவும், தமிழக மக்களின் வாழ்க்கைத்தரம் மென்மேலும் உயரவும், எஞ்சியுள்ள என் வாழ்நாளை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். கழகத் தொண்டர்களே யாரும் கலங்க வேண்டாம், நம் புரட்சித்தலைவர் கண்ட கனவு நனவாகும் காலம் நெருங்கிவிட்டது. நம் புரட்சித்தலைவர் அவர்கள் தொண்டர்களை தியாகத்தின் மறு உருவமாக கருதினார். எங்கு, எந்த மேடையில் பேசினாலும் “என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புக்களே” என்றுதான், தன் இறுதி மூச்சு வரை நம் தொண்டர்களை அழைத்தார்.

ஒரு ஐந்து பேர் கூடி முடிவெடுத்து தன்னை திராவிட முன்னேற்றக் கழகத்திலிருந்து நீக்கியதை மனதில் வைத்துதான், அனைத்து அடிப்படை தொண்டர்களும் ஏற்றுக்கொண்ட ஒருவரால்தான், தனது கட்சியை சிறப்பாக வழி நடத்த முடியும் என்று கருதிய நம் புரட்சித்தலைவர், இதற்காகத்தான் பொதுச்செயலாளர் என்ற பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் கட்சியின் அனைத்து அடிப்படை உறுப்பினர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவேண்டும் என்ற தனித்துவமான ஒரு சட்ட விதியை நாட்டிலே வேறு எந்த கட்சியிலும் இல்லாத ஒரு விதியை தனது கட்சிக்காக உருவாக்கினார்.

இதை குறிப்பிடும்போது, நம் புரட்சித்தலைவர் ஒரு கழக நிகழ்ச்சியில் அன்றைக்கு பேசியதை, இன்று நான் அனைவருக்கும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அதாவது, “மிகப்பெரிய பொறுப்பை ஏற்கும் பொதுச்செயலாளர் பதவிக்கு தொண்டர்கள் தான் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று கூறுவது எப்படித் தவறாகும். எந்தப் பதவியையும் பெறாத தொண்டன் பதவிக்கு தேர்ந்தெடுக்கும் உரிமைகூட இல்லாமல் – வேலைக்காரனாய், எடுபிடியாய், வால்பிடிப்பவனாய், அடிமையாய், ஏவலாளனாய், இருக்கத்தான் வேண்டுமா?

நல்லதா, கெட்டதா என்று சீர்தூக்கிப் பார்ப்பது முதற்கடமை. நல்லதென்றால் அதை நிறைவேற்றுவதற்கு ஏற்ற வழிமுறைகளைக் கண்டுபிடிக்கத்தான் வேண்டும். நான் கேட்கிறேன்…. ஒரு கட்சியைக் கட்டிக்காக்கின்ற தொண்டனுக்கு தனக்கு ஆணையிடும் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்கும் உரிமை வேண்டுமா? வேண்டாமா? தொண்டரென்றால் யார்? ஒரு அரசியல் கட்சியின், அஸ்திவாரமும் அவன்தான் மைய மண்டபமும் அவன்தான் மாளிகையின் முகப்பும் அவன்தான் படிகளும் அவன்தான் படியேற்றி விடுபவனும் அவன்தான் படியிலிருந்து இறக்கிவிடுபவனும் அவன்தான் கொடிக்கம்பம் நடுபவனும் அவன்தான்.. கொடியை காப்பவனும் அவன்தான்.. அடிபடுபவனும் அவன்தான்.. அடிமட்டத்திலிருப்பவனும் அவன்தான் உனக்காக என் உயிர் என்பதறிவான் எனக்கென்ன தருவாய் எனக் கேட்டறியான் – கொள்கையின் உயிர்மூச்சு அவன் அவன் உயிர் – கட்சி உடல் அவன் அசைந்தால்தான் கட்சி இயங்கும். அவன் அடங்கிவிட்டால் கட்சி முடங்கிவிடும்.” என்று நம் புரட்சித்தலைவர் அன்றே தீர்க்கதரிசனமாக சொல்லி சென்றதை நாம் ஒவ்வொருவரும் மறக்காமல் கடைபிடித்தால்தான் நம் இயக்கம் நிலைக்கும். இதை மனதில் வைத்துதான் நம் புரட்சித்தலைவியும் எத்தனை நூறாண்டானாலும் கழகம் மென்மேலும் வளரும் என்று சூளுரைத்தார்.

நம் இயக்கத்தின் இருபெரும் தலைவர்களும், நம்மை விட்டு மறைந்த மாதமான இந்த டிசம்பர் மாதத்தில் கழகத் தொண்டர்களும், நம் தலைவர்களின் பிரிவை தாங்கிக்கொள்ள முடியாமல் வருத்தமுடன் தவிக்கின்ற வேளையில், இது போன்று நிகழ்வுகளை கழகத்தினர் நடத்த திட்டமிடுவது யாராலும் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒரு செயல் ஆகும். இதை எல்லாம் நினைத்து பார்க்கும் போது எனக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது. குறிப்பிட்ட ஒரு சிலர் மட்டும் எல்லாவித பலன்களை அடைவதையும், அவர்களுடைய தனிப்பட்ட தேவைகளுக்காக செயல்படுவதையும், இயக்கத்தின் ஆணிவேராக இருக்கின்ற அடிமட்டத் தொண்டர்கள் இனியும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

இது போன்று, ஒரு சிலரால் கட்சிக்கு ஏற்படும் ஆபத்தை மனதில் வைத்துதான், அன்றைக்கே நம் புரட்சித்தலைவர் அவர்கள், “தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ அதைக் கேள்வி கேட்க ஆள் இல்லாமல் பார்த்து நிற்பதோ” என்று தன் பாடல் வாயிலாக நமக்கெல்லாம் எச்சரித்து சென்றுள்ளார். நம் புரட்சித்தலைவரும், நம் புரட்சித்தலைவியும் என்றைக்கும் நம்மோடு இருக்கிறார்கள் கலங்க வேண்டாம். கழகம் என்றைக்கும் தோற்று போக விடமாட்டேன். இது உறுதி.

எந்த ஒரு செயலானாலும் எல்லோரும் ஒன்றிணைந்து, மகிழ்ச்சியோடு அனைவராலும் ஆசிர்வதிக்கப்பட்டு நடைபெறும் போதுதான், அந்த செயல் சிறப்பானதாக இருக்கும்.

நம் புரட்சித்தலைவரின் எண்ணத்திற்கு வலு சேர்க்கும் வகையிலும், நம் அடிப்படைத் தொண்டர்கள் பலனடையும் வகையிலும், நம் புரட்சித்தலைவர் உருவாக்கிய சட்ட விதிகள் அழிந்து விடாமல், இதற்கு வலுசேர்க்கும் வேலைகளை முதலில் செய்வதுதான் இன்றைக்கு நமது முதல் கடமையாக கொண்டு, ஒன்றிணைவோம் வென்று காட்டுவோம். இந்த பணிகளை வெற்றிகரமாக செய்து முடிக்கும் வரை கண் அயராது, ஓய்வின்றி உழைப்போம், உழைப்போம் என்று அனைத்து அடிமட்ட தொண்டர்களையும் அன்போடு கேட்டு கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *