ஈஷாவைச் சுற்றியுள்ள பழங்குடியின மற்றும் பின்தங்கிய கிராமங்களில் இருக்கும் மாணவர்களின் கல்வி கனவுகளை ஈஷா நிறைவேற்றி வருகிறது என பெற்றோர்கள் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஈஷா யோகா மையத்தில் இன்று (28/09/2025) பழங்குடியின மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு, ‘சத்குரு ஸ்ரீ பிரம்மா கல்வி உதவித்தொகை’ வழங்கும் விழா நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ஆனைக்கட்டி தொழிற்பயிற்சி நிலையத்தின் முதல்வர் அமராவதி கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை வழங்கினார். இவ்விழாவில் அவருடன் ஈஷா அவுட்ரீச் ஒருங்கிணைப்பாளர் சுவாமி சித்தாகாஷா, மா ஜாக்ருதி மற்றும் தன்னார்வலர் சின்னசாமி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில் பழங்குடியின மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகையைப் பெற்றுக் கொண்டனர். முன்னதாக, இவ்விழாவில் கடந்த ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்ற மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் ஈஷாவின் கல்வி சேவைகள் தொடர்பான தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
செம்மேடு கிராமத்தைச் சேர்ந்த சஞ்சீவ் என்ற இளைஞரின் தந்தை கிருஷ்ணசாமி பேசுகையில், “ஈஷா அறக்கட்டளை, என் மகனுக்கு கல்வி உதவித்தொகை அளித்து படிக்க வைக்கிறது. நான் கடந்த 15 வருடங்களாக கவனித்து வருகிறேன் ஈஷாவைச் சுற்றியுள்ள கிராம மாணவர்களின் கல்விக்கு ஈஷா பெரிதும் உதவி வருகிறது.” எனக் கூறினார்.

சீங்கபதி கிராமத்தைச் சேர்ந்த கொடிமலர் என்ற மாணவியின் அம்மா பேசுகையில், “என்னுடைய மகள் விமானநிலைய மேலாண்மைத் துறையில் படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஆனால் எங்களுக்கு அதற்கான பொருளாதார வசதி இல்லை. இந்நிலையில் ஈஷாவின் கல்வி உதவித் தொகையால் என்னுடைய மகள் அவள் விரும்பிய கல்வியை பெற முடிகிறது. இதற்கு சத்குருவிற்கும் ஈஷா தன்னார்வலர்களுக்கும் நன்றி” எனக் கூறினார்.
முன்னதாக பேசிய மாணவர்கள், “ஈஷா கல்வி உதவித்தொகை வழங்குவதோடு மட்டுமில்லாமல், ஆங்கிலத்தில் சரளமாக பேசுவதற்கான பயிற்சி, மென்பொருள் துறையில் பயிற்சி, வேலைக்கான நேர்காணல்களில் வெற்றிப் பெறுவதற்கான பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகளையும் கல்லூரிகளுக்கு சென்று வருவதற்கான போக்குவரத்து சேவைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்” எனக் கூறினர்.
இவ்விழாவில் ஈஷாவைச் சுற்றியுள்ள பச்சான்வயல்பதி, சர்கார் போறத்தி, சீங்கபதி, முள்ளாங்காடு, தானிக்கண்டி, மடக்காடு உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. இக்கல்வி உதவித்தொகையின் மூலம் மாணவர்கள் கோவையில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா, பி.எஸ்.ஜி, ஹிந்துஸ்தான், வி.எல்.பி ஜானகியம்மாள் உள்ளிட்ட பல்வேறு கல்லூரிகளில் தாங்கள் விரும்பிய துறைகளில் கல்வி பயின்று வருகிறார்கள். இதில் குறிப்பாக மருத்துவம், மென் பொறியியல், வணிகவியல், விமானநிலையம் மேலாண்மை, தடயவியல் உள்ளிட்ட துறைகளில் கிராம மாணவர்கள் கல்வி பயின்று வருவது குறிப்பிடத்தக்கது.
பழங்குடி கிராம மாணவர்களுக்கு கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக, ஈஷாவால் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான முதல் தலைமுறை பட்டதாரிகள் உருவாகி சிறந்த வேலை வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை வழங்கும் விழாவை கடந்த ஆண்டுகளில் கல்வி உதவித்தொகை பெற்ற முன்னாள் மாணவ, மாணவிகளே ஒருங்கிணைத்து நடத்தினர்.