பழனி- புது தாராபுரம் சாலையில் ரயில் நிலையம் அருகே இரயில்வே கேட் அமைக்கப்பட்டுள்ளது. காலை, மாலை வேலைகளில் இரயில் வந்து செல்லும்போது இந்த சாலையில் உள்ள இரயில்வே கேட் அடைக்கப்படுகிறது.

சுமார் 20 நிமிடம் முதல் 40 நிமிடம் வரை இரயில்வே கேட்டு அடைக்கப்படுவதால் வாகனங்கள் சாலையில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றன. இதனால் அவசரத்திற்க்கு மருத்துவமனைக்கு செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிக்கு செல்வோர் தாராபுரம் சாலையை கடந்து செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் நீண்ட நாளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை நிர்வாகம் . 120 கோடி ரூபாயில் மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஓராண்டு தாண்டியும் இன்றுவரை மேம்பாலம் அமைக்க நிலம் எடுப்பு மற்றும் கட்டுமான பணிகள் துவங்கப்படாமல் உள்ளன. இந்த நிலையில் தாராபுரம் சாலையில் மேம்பாலம் அமைத்துக் கொடுக்க கோரி மக்கள் உரிமைகள் பாதுகாப்பு கழகம் சார்பில் அரசின் கவனத்தை ஈர்க்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு ரயில்வே மேம்பால பணிகளை விரைவாக துவங்க வலியுறுத்தி கோசம் எழுப்பினர்.








