விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே அர்ச்சுனாபுரத்தில் அமைந்துள்ளது நல்லதங்காள் கோயில். தமிழக பெண்களின் கலாச்சாரத்திற்கும், அண்ணன் தங்கை உறவிற்கும் மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கிய நல்லதங்காள், அவர் வாழ்ந்த 15-ம் நூற்றாண்டில் நாட்டில் நிலவிய கடும் பஞ்சம் காரணமாக பசியால் துடித்த தனது ஏழு பிள்ளைகளையும் கிணற்றில் வீசி கொன்றுவிட்டு தானும் அந்த கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

அவர் தற்கொலை செய்து கொண்ட கிணறு அவர் தங்கிய இடம் ஆகியவை நினைவுச் சின்னமாகவும் கோயிலாகவும் எழுப்பப்பட்டு மக்களால் வழிபடப்பட்டு வருகிறது. அக்கோயிலில் நல்லதங்காள் பத்திரகாளியம்மன் வடிவில் எழுந்தருளி அருள் பாலித்து வருகிறார்.தமிழகம் முழுவதிலும் இருந்தும் குழந்தை வரம் வேண்டி ஏராளமானோர் இங்கு வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டு வருகின்றனர்.
இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு நல்லதங்காள் சிலை உடைக்கப்பட்டதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர் .இந்த சம்பவத்தில் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் சிலை உடைக்கப்பட்ட நல்லதங்காள் கோயிலில் அர்ச்சுனாபுரம் கிராம மக்கள் சார்பாக ஏற்கனவே பாலாலயம் நடத்தப்பட்ட நிலையில் தற்போது இந்து சமய அறநிலைத்துறை சார்பாக இன்று பாலாலயம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் நூற்றுக்கணக்கானோர் கோயில் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கணை கண்காணிப்பாளர் ராஜா, காவல் ஆய்வாளர் மாரியப்பன், வட்டாட்சியர் ஆண்டாள் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் அந்த பகுதியில் 30 க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.