• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

ட்ராவல்ஸ் அதிபர் கொலை, கள்ளக் காதலி கைது !!!

BySeenu

May 4, 2025

தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த சிகாமணி (வயது 45 ). என்பவர் துபாயில் கடந்த 20 வருடமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் கடந்த மாதம் 21 ஆம் தேதி துபாயில் இருந்து கோவைக்கு விமானத்தில் வந்த நிலையில் அதன் பிறகு மாயமாகி விட்டதாக தஞ்சையில் வசித்து வரும் அவரது மனைவி பிரியா (வயது 42 ) என்பவர் கோவை பீளமேடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் சிகாமணியை காணவில்லை என வழக்கு பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இந்த நிலையில் சிகாமணி கோவை காந்திமா நகரை சேர்ந்த சாரதா சண்முகம் என்பவருடன் மேற்பட்ட பழக்கம் மற்றும் அதைத் தொடர்ந்து அவர்களுக்குள் நடந்த பண பிரச்சனையால் கடந்த மாதம் 24 ஆம் தேதி மது மற்றும் கோழி இறைச்சியில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த பீளமேடு போலீசார் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது துபாயில், சிகாமணி டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் அலுவலகம் அருகில் ஹோட்டலில் வேலை பார்த்து வந்த கோவை காந்திமா நகரை சேர்ந்த சாரதா சண்முகம் (வயது 32) என்ற பெண் தன்னை அங்கு வைத்து பண பிரச்சனையில் சிகாமணி அடித்ததால் கோவையில் உள்ள தனது தாய் கோமதி இடம் கூறி அழுதுள்ளார்.

உடனே கோமதி அவருடன் வசித்து வரும் தியாகராஜன் (வயது 69 ) என்பவரிடம் மகள் சாரதாவிற்கு துபாயில் நடந்த பிரச்சனை குறித்து கூறியதும் சிகாமணியை கோவைக்கு அழைத்து வந்து கொலை செய்து விடலாம் என்று திட்டம் திட்டி உள்ளனர். அதன் படி சாரதா சிகாமணியை கடந்த மாதம் 21 ஆம் தேதி கோவைக்கு அழைத்து வந்து உள்ளார். கோவை காந்திமா நகரில் உள்ள தியாகராஜன் வீட்டில் 24 ஆம் தேதி சிகாமணிக்கு மதுவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து உள்ளனர். 30 தூக்க மாத்திரை கலந்த மது மற்றும் கோழி இறைச்சியை சாப்பிட்ட சிகாமணி மயங்கியதும் அவரது மார்பில் சாரதா ஏறி நின்று மிதித்து உள்ளார். இதில் சிகாமணி இறந்து விட்டார்.

அதன் பிறகு சிகாமணி உடலை காரில் ஏற்றிக் கொண்டு கரூர் மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள காட்டுப் பகுதியில் வீசி விட்டு வந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பொன்னமராவதியில் அனாதையாக கிடந்த சிகாமணி உடலை3 நாட்கள் ஆகியும் யாரும் தேடி வராததால் அவர் இயற்கையாக இறந்ததாக கருதிய கே பரமத்தி போலீசார் அதை மாநகராட்சி சுடுகாட்டில் புதைத்து விட்டதும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து இந்த கொலையில் தொடர்புடைய தியாகராஜன், சாரதாவின் தாய் கோமதி, சகோதரி நீலா, உறவினர் சுவாதி மற்றும் நெல்லை தச்சநல்லூரை சேர்ந்த புதியவன் ஆகிய5 பேரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலையில் சாரதா துபாயில் இருந்ததால் அவரை போலீசாரால் கைது செய்ய முடியவில்லை. இந்த நிலையில் துபாயில் இருந்து சென்னை வழியாக வந்த சாரதாவை நேற்று இரவு போலீசார் கோவையில் கைது செய்தனர்.

அவரிடம் சரவணம்பட்டி போலீசார் நீண்ட நேரம் விசாரணை நடத்தினர். சாரதா விடம் வாக்குமூலத்தை பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கு இடையே இந்த வழக்கில் அனாதை பிணம் என்று புதைக்கப்பட்ட சிகாமணியின் உடலை நேற்று கரூர் மாநகராட்சி சுடுகாட்டில் தாசில்தார் முன்னிலையில் தோண்டி எடுத்த போலீசார் அங்கு டாக்டர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்தனர்.

அதன் பிறகு அவரது உடல் மனைவி பிரியாவிடம் ஒப்படைக்கப்பட்டு தஞ்சை கொண்டு செல்லப்பட்டது. இப்போது கொலை நடந்த இடம் காந்தி மாநகர் தியாகராஜன் வீடு என்பதால் இந்த பகுதி சரவணம்பட்டி போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்பதால் வழக்கு சரவணம்பட்டி போலீசாருக்கு மாற்றப்பட்டு உள்ளது. இன்ஸ்பெக்டர் நிர்மலாதேவி இந்த வழக்கை தற்போது விசாரணை செய்து வருகிறார்.