அரசின் அறிவிப்புகளும் அரசு ஊழியர்களின் வரவேற்பும், எதிர்பார்ப்பும்
தமிழ்நாடு அரசுஊழியர் சங்கத்தின் பிரதான கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசிடம் முறையீடு செய்தும், தொடர் போராட்டங்களை நடத்தி வரும் சூழலில் நடப்பு சட்டமன்றத்தில் 2025-26 பட்ஜெட் கூட்டத்தொடரில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் எதிர்பாத்திருந்த நிலையில் இன்று (27.04.2025) தமிழ்நாடுஅரசின் மாண்புமிகு முதல்வர் அவர்கள் சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் அறிவித்துள்ள அறிவிப்புகளை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கின்றோம்.

குறிப்பாக ஈட்டிய விடுப்பு 15 நாட்கள் சரண் செய்து பணப்பயன் 01.10.2025 முதல் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 01.01.2025 முதல் 2% அகவிலைப்படி உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக பணியில் சேர்ந்துள்ள பெண் அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் மகப்பேறுவிடுப்பு காலத்தை அவர்களின் தகுதிகாண் பருவத்திற்கு கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என மாண்புமிகு முதல்வர் அவர்களின் அறிவிப்பை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக வரவேற்கிறோம்.
மேலும், பண்டிகை கால முன்பணம் ரூ.20,000/- உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் குழந்தைகள் உயர்கல்விக்கான முன்பணம் 1,00,000/- மற்றும் 50,00/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் திருமண முன்பணம் ரூ.5,00,000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
அதே சமயம், மேற்கண்ட அறிவிப்பில் சத்துணவு, அங்கன்வாடி, ஊர்புற நூலகர்கள், MRB மூலம் தேர்வு செய்யப்பட்ட செவிலியர்கள், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பணிபுரியும் PPP & COE ஊழியர்களின் காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும்.
65 லட்சத்திற்கும் மேற்பட்ட படித்த இளைஞர்கள் வேலைக்காக காத்துக்கொண்டிருக்கின்ற நிலையில் அரசுத்துறையில் காலியாகவுள்ள 4,50,000 காலிப்பணியடங்களை நிரப்பி அரசு அலுவலகங்களில் ஊழியர்களிடையேயான பணிப்பளுவை குறைத்திட வேண்டும். அரசுப்பணியில் பணிபுரிந்துகொண்டிருக்கும் போது இறக்கும் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்கும் கருணை அடிப்படை பணிநியமனத்தை மீண்டும் 25%மாக உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டுமென தமிழ்நாடு அரசையும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களையும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றோம்.
பழைய ஓய்வூதியத்திட்டம், பங்களிப்பு ஓய்வூதியத்திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதியத்திட்டம் ஆகிய மூன்றையும் ஆராய்ந்திட அமைக்கப்பட்ட குழு பரிந்துரையை செப்டம்பர் 2025க்குள் சமர்ப்பித்திட அறிவுறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் நீண்ட கால கோரிக்கையாகவும், இலட்சக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பணிநிறைவுக்கப்பிற்கான அந்திமக்காலத்தை நிம்மதியாக வாழும் வகையில் மாண்புமிகு முதல்வர் அவர்கள் 2021 தேர்தலுக்கு முன்பாகவும், தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியில் அறிவித்துள்ளபடி இலட்சக்கணக்காான அரசு ஊழியர்களின் அந்திம காலத்தை பாதுகாக்கக்கூடிய பழைய பயனளிப்பு ஓய்வூதியத்திட்டமாக அறிவிக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
என அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.