ஒமைக்ரான் தொற்று எச்சரிக்கையால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், விமானங்களில் வருவோர் தவறான முகவரி அளித்து தமிழகத்துக்குள் நுழைந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.
சென்னை அண்ணாநகர் புறநகர் மருத்துவமனையில் சி.எஸ்.ஆர். நிதி பங்களிப்போடு அமைக்கப்பட்டுள்ள 2 ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கொள்கலனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் ஆக்சிஜன் உற்பத்தி 270 கி.லி என்கிற அளவில் இருந்தது.
ஆனால் தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு 744.67 கி.லி. ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி பங்களிப்பில் 70 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன. ஆக்சிஜன் வசதியை பொறுத்த அளவில் தமிழகம் தன்னிறைவு பெற்று விளங்குகிறது என்றார்.தொடர்ந்து பேசிய அவர், வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களை தொடர்ந்து கண்காணிக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறான தகவல் கொடுத்து விமானங்கள் மூலம் யாரேனும் தமிழகத்துக்கு வந்தால், அவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். என்று அவர் தெரிவித்தார்.