பெட்ரோல் டீசல் விலையை மத்திய அரசு குறைத்த நிலையில் தமிழக அரசு விலை குறைக்காததை கண்டித்து சேலம் மாவட்ட பாஜக ஓபிசி அணியின் சார்பில் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழகம் முழுவதும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் பாரதிய ஜனதா கட்சியின் ஓபிசி அணி சார்பாக வழக்கறிஞர் சண்முகநாதன் தலைமையில் மாபெரும் மனிதசங்கிலி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். இந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் மாநகர மாவட்ட தலைவர் சுரேஷ்பாபு, கோட்ட பொறுப்பாளர் கோபிநாத் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.