• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது!

ByP.Kavitha Kumar

Mar 27, 2025

தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் தொடங்குகிறது. இந்த தேர்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மார்ச் 1 முதல் 25-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதன்பின் மார்ச் 4-ம் தேதி தொடங்கிய பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து பத்தாம் வகுப்புக்கான பொதுத்தேர்வு நாளை (மார்ச் 28) முதல் ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

முதல்நாளில் தமிழ் உட்பட மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13,036 பேர் எழுதுகின்றனர். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87,148 மாணவர்கள், 25,888 தனித்தேர்வர்கள் மற்றும் 272சிறை கைதிகளும் அடங்குவர்.

பொதுத்தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 48,426 ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,858 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சுமார் 300 வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். தேர்வு மையங்களில் குடிநீர், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.