விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மனு கொடுக்கும் நாள் என்பதால் பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்பொழுதும்போல் நுழைவாயிலில் போலீசார் வரும் மனுதாரரிடம் அவர்களது பைகளை சோதனை செய்து அனுப்புவது வழக்கம். அதேபோல் இன்று மாவட்ட ஆட்சியர் கார் முன்பு சாத்தூர் ராவுத்தன் பட்டியை சேர்ந்த ராஜலட்சுமி வயது 35 என்பவர் தனது எட்டாம் வகுப்பு, ஏழாம் வகுப்பு, மூன்றாம் வகுப்பு படிக்கும் மூன்று பெண் குழந்தைகளுடன் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலை செய்ய முயன்றார். இதனைப் பார்த்த அங்கிருந்த பெண் காவலர் மற்றும் அங்கு பணியிலிருந்த கூரைக்குண்டு கிராம உதவி அலுவலர் சுப்புலட்சுமி கையிலிருந்த மண்ணெண்ணெய் கேனை போராடி தட்டிவிட்டனர். இதனால் 4 உயிர்கள் காப்பாற்றப்பட்டது.
உடனே அங்கிருந்த சூலக்கரை சார்பு ஆய்வாளர் கார்த்திகா தற்கொலைக்கு முயன்ற 4 பேரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்களது சொந்த ஊரில் ஜெயபால், சுப்புராஜ் ஆகியோர் சட்டவிரோதமாக கிராவல் மண் எடுத்து வருவதாகவும், அதை காவல்துறையிடம் ராஜலட்சுமி தான் காட்டிக் கொடுத்தார் என்று பாதிக்கப்பட்டவர்கள் ராஜலட்சுமியின் பருத்தி காட்டுக்குள் விஷத்தை கலந்து தெளித்து உள்ளனர். இதனால் பயிரிடபட்ட மாக்காசோளம் முழுவதும் வீணாகிவிட்டது. ஏற்கனவே மாவட்ட ஆட்சியரிடம் இதுகுறித்து ராஜலட்சுமி மனு கொடுத்தபோதும் நடவடிக்கை இல்லாததால் தற்போது இந்த முடிவை எடுத்துள்ளார் என்று தெரிகிறது.
மேலும் நுழைவுவாயிலில் காவல்துறை பாதுகாப்பையும் மீறி 5 லிட்டர் மண்ணெண்ணெய் கேனுடன் பெண் எப்படி உள்ளே வந்தார் என்பது சந்தேகமாக உள்ளது. இது காவல்துறையின் கவனக்குறைவை காட்டுவதாகவே தெரிகிறது.பெண் மற்றும் அவரது மூன்று குழந்தைகள் தீக்குளிக்க முயன்றதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.