நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
மதுரை முக்குலத்தோர் இலவச கல்வி மற்றும் வேலைவாய்ப்பு அறக்கட்டளையில் படித்து கடந்த 2023 – 24 மற்றும் 2024 – 2025 ஆகிய இரண்டு ஆண்டுகளில் அரசுப் பணிக்கு தேர்வாகியுள்ள 421 முக்குலத்து மாணவ, மாணவிகளுக்கான பாராட்டு விழா நடந்தது. இதில் தமிழ்நாடு பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு பேசியது தற்போது சர்ச்சையாகியுள்ளது.
இந்த விழாவில் அவர் பேசும் போது, “நாம் ஆண்ட பரம்பரை என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். பல வரலாறு மறைக்கப்பட்டுள்ளது. தற்போது ஐந்து பேர் இறந்துபோனால் கூட பெரிதாக பேசப்படுகிறது. சுதந்திரத்திற்காக 10 ஆயிரத்துக்கும், மேற்பட்டோர் இறந்து போனார்கள் என்பதை வரலாற்றை புரட்டி பார்க்க வேண்டும். நாயக்கர்கள் காலகட்டத்தில் கொள்ளையடித்துச் செல்லும்போது இந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் தான் முன்களத்தில் நின்று ஐந்தாயிரம், பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தார்கள்.
இதேபோல்தான் உசிலம்பட்டியில் 16 பேர் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். படிப்பறிவில் பின்தங்கி இருந்த காரணத்தினாலேயே நமது வரலாறு வெளிய கொண்டு வரப்படாமல் பின்தங்கிவிட்டது. ஆனால் தற்பொழுது அந்த நிலை மாறி வருகிறது” என்றார். சாதி ரீதியான அமைச்சரின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது.