கோவை, வடவள்ளி பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி கலைவாணி. மாநகராட்சி பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த 20.12.2024 அன்று, கலைவாணி பள்ளிக்குச் சென்ற நேரத்தில், அவருடைய கணவர் அவருக்கு மதிய உணவு கொடுப்பதற்காக சென்று இருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாததை தெரிந்து கொண்ட மர்ம நபர்கள் வீட்டின் கதவை உடைத்து வீட்டில் இருந்த 58 பவுன் நகையை திருடிச் செல்லும் பொழுது, ரமேஷ் வந்து இருக்கிறார். அவரை தள்ளி விட்டு விட்டு அங்கு வந்த இருவர் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்று உள்ளனர்.


இது சம்பந்தமாக வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டு கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், 300 க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வடவள்ளியைச் சேர்ந்த மோகன கிருஷ்ணன் (27), கேரளாவைச் சேர்ந்த பிரவீன் (42), மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சையுபுதீன் (42), வடவள்ளியைச் சேர்ந்த தினேஷ், தேவிகா, ஆகியோரை பிடித்து விசாரணை செய்ததில், அவர்கள் மேற்கண்ட குற்றத்தை செய்து கொண்டதாக ஒப்புக்கொண்டனர். இதில் திருட்டிற்காக பயன்படுத்திய இருசக்கர வாகனம் மற்றும் 40 பவுன் நகை மற்றும் பணம் கைப்பற்றப்பட்டு ஐந்து பேரும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இதில் மோகன கிருஷ்ணன் மற்றும் பிரவீன் மீது ஏற்கனவே கர்நாடகா, கன்னியாகுமரி மற்றும் கேரள காவல் நிலையங்களில் பதினாறு வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரிய வந்து உள்ளது.