2026 சட்டமன்றத் தேர்தல் வியூகம் வகுப்பது தொடர்பாக, நாளை எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை காலை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இதில் அனைவரும் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார்.
இக்கூட்டத்தில் பேசக்கூடிய விஷயங்களும், எடுக்கக்கூடிய முடிவுகளும் அதிமுகவின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் வகையில் இருக்கும் எனத் தெரிகிறது. அதிமுகவில் ஈபிஎஸ் தலைமையில் ஒற்றை தலைமை உருவான பின்னர் உறுப்பினர் சேர்க்கை மிக தீவிரமாக நடைபெற்றது. 2 கோடியே 20 லட்சம் பேருக்கு மேல் உறுப்பினர்களாக உள்ள நிலையில், அவர்களுக்கு புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கும் பணிகள் மாவட்ட வாரியாக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இந்த பணிகள், எந்த அளவில் உள்ளன, மாவட்டம் முழுவதும் உறுப்பினர் அட்டையை மாவட்டச் செயலாளர்கள் விநியோகித்துள்ளனரா?, இன்னும் எத்தனை சதவீதம் நிறைவடைய வேண்டியுள்ளது போன்ற விஷயங்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. இதுதவிர்த்து, கட்சியின் உட்கட்சித் தேர்தல் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது. கிளைக் கழகச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான உட்கட்சித் தேர்தலுக்கு கட்சி நிர்வாகிகளை தயார்படுத்துவது குறித்தும் மாவட்டச் செயலாளர் கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.
