உசிலம்பட்டி அருகே மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேரையூர் ரோடு தேவர் சிலை பின்புறம் உள்ள தோட்டத்தைச் சேர்ந்தவர் பங்கஜம். தனது தோட்டத்தில் சுமார் 3 பசுமாடுகளையும் அதன் கன்றுகளையும் வைத்து வளர்த்து வருகிறார்.

இந்நிலையில் இன்று வழக்கம் போல மாடுகளையும், கன்றுக் குட்டியையும் தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்த நிலையில், இரண்டரை வயது மதிக்கத்தக்க கன்றுக் குட்டி மீது அவ்வழியாக செல்லும் மின் வயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டி துடிதுடித்து பறிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
இதனை கண்ட பங்கஜம் அதிர்ச்சியடைந்து இது குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த உசிலம்பட்டி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.



