• Wed. Feb 4th, 2026
WhatsAppImage2026-01-31at0134274
previous arrow
next arrow
Read Now

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு

BySeenu

Oct 9, 2024

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு, கோவை எஸ்.எல்.வி. மருத்துவமனையில் இந்த மாதம் முழுவதும் மார்பக புற்று நோய் தொடர்பாக இலவச பரிசோதனைகளும் சலுகை கட்டணத்தில் சிகிச்சையும் வழங்க உள்ளதாக மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

மார்பக புற்று நோய் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அக்டோபர் மாதம் முழுவதும் பிங்க் மாதம் என மார்பக புற்று நோய் குறித்த பிரச்சாரங்கள் செய்யப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக கோவை நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள எஸ்.எல்.வி.
மருத்துவமனையில் மார்பக புற்று நோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இது குறித்து எஸ்.எல்.வி.மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரும் தமிழ்நாடு புற்றுநோய் அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவரும் ஆன மருத்துவர் சுரேஷ் வெங்கடாச்சலம் செய்தியாளர்களிடம் பேசினார். S.L.V மருத்துவமனையில் தொடக்க காலத்தில் இருந்து எல்லா வருடமும் தொடர்ந்து செப்டம்பர் மாதத்தில் “ரோஸ் தினத்தையும் அக்டோபர் மாதத்தில் பிங்க் மாதமாகவும் நடத்தி வருவதாக தெரிவித்த அவர், மார்பகப் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வுகளை தொடர்ந்து நடத்தி வருவதாக தெரிவித்தார். ஆரம்ப நிலையிலேயே மார்பக புற்றுநோயை கண்டறிந்தால் சிகிச்சையின் வாயிலாக முழுவதுமாக குணப்படுத்த முடியும் என கூறிய அவர், 50 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஓவ்வொரு மாதமும் தங்களது மார்புகளை சுய பரிசோதனை செய்து கொள்வது அவசியம் எனவும், ஆண்டுதோறும் மருத்துவ பரிசோதனைகள், மேமோகிராம் எனும் மார்பக ஸ்கேன் செய்து கொள்வது அவசியம் என தெரிவித்தார்.

தற்போது பல்வேறு மருத்துவ துறையின் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிகளால், மார்பகப் புற்றுநோய் கட்டியை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால், மார்பகத்தை முழுவதும் அகற்றாமல், புற்றுநோய் கட்டியை மட்டும் அகற்றி எளிதாக அறுவை சிகிச்சை செய்ய இயலும் என தெரிவித்தார்.

குறிப்பாக எங்களது எஸ்.எல்.வி. மருத்துவமனையில் நவீன ஆன்கோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையில் மார்பக புற்றுநோய்க்காக மார்பகம் அகற்றுவதை முற்றிலுமாக தவிர்ப்பதாக அவர் கூறினார்.

இந்த சந்திப்பின் போது மருத்துவமனையின் பொது மருத்துவர் அபீஸ் உடனிருந்தார்.