உசிலம்பட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகளை சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவுவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருவது குறித்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி கவணம்பட்டி, கருகட்டான்பட்டி, கீழப்புதூர், மேலப்புதூர், அருணாச்சலம்பட்டி, வடகாட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை கொண்ட 24 வார்டுகளை கொண்டுள்ளது.

இந்த 24 வார்டு பகுதிகளிலும் கடந்த சில மாதங்களாக குப்பைகள் சேகரிப்பதில் மந்தமான சூழல் நிலவி வருவதால் ஆங்காங்கே குப்பைகள் தேங்கும் நிலை நீடித்து வருகிறது.
குப்பைகள் தேங்கி காணப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இன்று குப்பைகளை சேகரிக்க செல்லும் நகராட்சி பணியாளர்களை உசிலம்பட்டி எம்எல்ஏ நேரில் ஆய்வு செய்து அவர்களுக்கு உள்ள பிரச்சனைகள் குறித்தும், குப்பைகள் சேகரிப்பில் உள்ள மந்த நிலை குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து எத்தனை பணியாளர்கள் பணிக்கு வந்துள்ளனர், எத்தனை மணி முதல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன என நகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்த எம்எல்ஏ அய்யப்பன், உசிலம்பட்டி நகர் பகுதியில் தங்கு தடையின்றி குப்பைகளை சேகரித்து, நகரை தூய்மையாக வைத்திருக்க உதவிடுமாறு நகராட்சி பணியாளர்களை கேட்டுக் கொண்டார்.