கோவையில் நடைபெற்ற இளம் வயது மாரடைப்பு குறித்த விழிப்புணர்வு ஹார்ட்டத்தான் எனும் வாக், ஜாக், ரன் போட்டியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
உலகம் முழுவதும் தற்போது உள்ள கால கட்டத்தில் இருதய பிரச்சனை என்பது அதிகமாகி வருகிறது. குறிப்பாக இளைஞர்கள் இருதய பிரச்சனையால் இளம் வயதிலேயே மாரடைப்பு ஏற்பட்டு இறக்கின்றனர். இத்தகைய இருதயத்தை சீராக வைத்துகொள்ள உடற்பயிற்சி, சரியான உணவு முறைகள் அவசியம், புகைபிடித்தலை தவிர்க்க வேண்டும், என்பதை வலியுறுத்தும் விதமாகவும் 30 முதல் 40 வயதில் வரும் மாரடைப்பு பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்ஸ் ஹார்ட்டத்தான் நிகழ்ச்சி கோவை ராம் நகர் பகுதியில் நடைபெற்றது.
ரோட்டரி சங்கங்கள் நடத்திய ஹார்ட்டத்தானை கோவை மாநகர காவல் துணை ஆணையர் சரவணகுமார் மற்றும் ரோட்டரி கவர்னர் சுந்தரவடிவேலு ஆகியோர் கொடி அசைத்து துவக்கி வைத்தனர். தொடர்ந்து வாக், ஜாக், ரன் முறையில் நடைபயணத்துடன் கூடிய 5 கிலோ மீட்டர் தூரம் மாரத்தான் ஓட்டமும் நடைபெற்றது. இதில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மாரடைப்பை தடுப்போம், உடல் நலம் காப்போம் , உயிர்காப்போம் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.